போதை மருந்து கடத்தல்... விஐபிகளின் கூலிப்படை தலைவன்... 'பி' கிரேட் தாதா 'பினு'.. பரபர பின்னணி
சென்னை பூந்தமல்லி அருகே பிறந்தநாள் கொண்டாடிய பிரபல தாதா பினு மட்டும் எஸ்கேப் ஆகியுள்ளார், இவர் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Recommended Video
சென்னை: சென்னையின் ரவுடிகளில் ஒருவரான பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சினிமா பாணியில் 72 ரவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் விழா நாயகனான பினு உள்ளிட்ட 3 பேர் எஸ்கேப் ஆகியுள்ளனர். ஆள்கடத்தல், முக்கிய பிரமுகர்களின் கூலிப்படைத் தலைவன் என்று பினுவின் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளன.
சென்னை பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் வைத்து பிரபல தாதா பினுவின் பிறந்த நாள் விழாவுக்கு அவருடைய கூட்டாளிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் போல சிறப்பாக இந்த பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வானவேடிக்கைகள், ஆள் உயர மாலை என்று மலையம்பாக்கம் பகுதியையே அதகளப்படுத்தியுள்ளனர் ரவுடிக் கும்பல். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒரே இடத்தில் கூடி கும்மாளம் அடித்துள்ளனர். இந்த தகவலை மோப்பம் பிடித்த போலீஸ் மாறு வேடத்தில் போய் 72 ரவுடிகளை அலேக்காக தூக்கிவிட்டது.
பி பிரிவு ரவுடிக் கும்பல் தலைவன்
ஆனால் எடுபிடி ரவுடிகளை பிடித்த போலீசார் விழா நாயகன் பினு, அவருக்கு அடுத்த லெவல் தாதாவான கனகு, மற்றும் விக்கியை பிடிக்காமல் கோட்டை விட்டுள்ளனர். தப்பியோடிய பினு போலீஸ் ரெக்கார்டுகளின் படி சென்னையின் பி கேட்டகரி ரவுடிக் கும்பலின் தலைவன். கேரளாவில் இருந்து வந்து சென்னை சூளைமேட்டில் செட்டிலான பினு மீது ஏராளமான ஆட்கடத்தல் வழக்குகள் உள்ளன.
அசைக்க முடியாத சக்தியாக இருந்த பினு
போதை மருந்து கடத்தல் கும்பலுடனும் பினுவிற்குத் தொடர்பு உள்ளது. சென்னையின் முக்கிய விஐபிக்கள் பலத்தில் போலீஸார் நெருங்க முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருந்தவர். பல குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பினுவின் கீழ் பெரிய ரவுடிகள் பட்டாளமே உள்ளது. ஏற்கெனவே தேடப்படும் குற்றவாளியாக பினு அறிவிக்கப்பட்டுள்ளார்.
3 கொலை வழக்கில் தொடர்பு
சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் அருகே பட்டபகலில் பெண் வழக்கறிஞர் முன்னிலையில் ரவுடி சென்னா மற்றும் ஜூனியர் வழக்கறிஞர் பகத்சிங்கை கொன்ற இரட்டை கொலை வழக்கு உள்பட பினு மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. தற்போது எஸ்கேப் ஆகியுள்ள பினுவிற்கு முக்கிய விஜபி ஒருவர் தான் அடைக்களம் கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஏ பிரிவு ரவுடிகளுக்கு கடுப்பு
அரசியல் கட்சியினரின் பின்னணி இல்லாமலா பட்டாக்கத்தியால் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் அளவுக்கு பினு ரவுடி கும்பலுக்கு துணிச்சல் இருந்திருக்கும் என்ற சந்தேகமும் எழுகிறது. பினு பி பிரிவு ரவுடிக் கும்பலின் தலைவனாக இருந்து கொண்டு தங்களை மிஞ்சி வளர்ந்து வருவது ஏ பிரிவு ரவுடிகள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறதாம். இப்படிப்பட்ட வேளையில் தான் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாட்டில் போலீஸ் வளையத்திற்குள் வந்துள்ளார் பினு.
தோண்டித் துருவும் போலீஸ்
பினுவின் பழைய வழக்குகளை தோண்டித் துருவி வருகிறது காவல்துறை. பினு உள்ளிட்ட தப்பியோடிய 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவைச் சேர்ந்த பினு இந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் தான் இருக்கிறானா அல்லது தப்பி ஓடிவிட்டானா என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.