தானே புயல், பணமதிப்பு நீக்கத்தை முன்கூட்டியே சொன்னவர் 'மூக்கு பொடி சித்தர்'- பரபர தகவல்கள்!
கடலூர் மாவட்டத்தை கடும் சேதத்துக்கு ஆளாக்கிய தானே புயல் பற்றியும், இந்தியாவை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய பண மதிப்பு நீக்கம் பற்றியும் திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் முன்கூட்டியே உணர்த்தியவராம்.
திருவண்ணாமலை: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாக்கிய தானே புயல் பற்றியும், பணமதிப்பு நீக்கம் குறித்தும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர் மூக்குப்பொடி சித்தர் என்று அதிர வைக்கிறார்கள் அவரின் பக்தர்கள்.
இவரின் இப்போதைய வசிப்பிடம் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தின் முதல் தளத்தில் உள்ள வரவேற்பு அறை. அங்கு தரையில் அமர்ந்த நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிப்பது தான் மூக்குப்பொடி சித்தர் ஸ்டைல்.
சித்தரிடம் டிடிவி தினகரன் நேற்று ஆசி பெற்ற தகவல்கள் இப்போது தமிழக அளவில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக தினகரன் பலமுறை சித்தரிடம் மூக்குப்பொடி வாங்கிக்கொடுத்து ஆசிபெற்றுச் சென்றுள்ளார்.
ஆனால் இப்போது மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பு என்று தெரியவில்லை என்கிறார்கள் திருவண்ணாமலை வாசிகள். இதிலும் அரசியல் செய்கிறார்கள் என்பதில் சித்தரின் பக்தர்களுக்கு லேசான வருத்தம்தான்.

'மூக்குப்பொடி' சித்தர் யார்?
மூக்குப்பொடி சித்தரின் பக்தர் ஆகாஷ் முத்துக்கிருஷ்ணன் கூறுகையில், " மூக்குப்பொடி சித்தரின் உண்மையான பெயர் மொட்டையக்கவுண்டர். சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம். அவருக்கு வயது 85 க்கு மேல்.

மனைவி இறந்தபிறகு ஆன்மிகம் நாட்டம்
சித்தரின் மனைவி இறந்த பிறகு, சுமார் 40 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் ஆன்மீக வாழ்வு வாழ்கிறார். அவர் யாரிடமும் பற்று செலுத்துவதில்லை. சொந்த பேரப்பிள்ளைகளிடம் கூட ஒட்டாமல்தான் இருப்பார்.
Recommended Video


யாருக்கும் அனுமதி இல்லை
மூக்குப்பொடி அதிகம் பயன்படுத்துவதால் பக்தர்களால் மூக்குப்பொடி சித்தர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள், ஆளுமைக்குள் யாரையும் அவர் அனுமதிப்பதில்லை.

அடிக்கடி இடம்மாறுவார்
3 மாதத்துக்கு மேல் ஒரு இடத்தில் வசிக்க மாட்டார். சிதம்பரத்தில் அதிக காலம் தங்கியுள்ளார். பல நாட்கள் உணவு எடுத்துக்கொள்ள மாட்டார். திடீரென சாப்பிடத் தொடங்குவார்.

தானே புயலை உணர்த்தியவர்
மக்களுக்கு வரும் துன்பங்களை குறிப்புகளாக முன்கூட்டியே உணர்த்தும் சக்தி கொண்டவர். இப்படித்தான் தானே புயல் தாக்க தொடங்கிய சில நாளுக்கு முன்பு, மதியம் வாக்கில் கடலூர் சென்று, கடலைப் பார்த்து ' அமைதியாக இரு, சத்தம் போடாதே' என்று பேசியுள்ளார்.

500, 1000 ரூபாய் தாள்களை கிழித்தெரிந்தார்
பணம் மதிப்பு நீக்கம் அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு, நடு ரோட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சுக்கல் சுக்கலாக கிழித்தெறிந்தார். கூடங்குளம் போன்ற பெரிய போராட்டங்களையும் குறிப்பால் உணர்த்தினார்.

அமைதி தருபவர்
அவரின் அனுமதியில்லாமல் யாரும் சந்திக்க முடியாது. தரிசிக்க முடியாது. அனுமதி கிடைத்து சந்தித்தால் மனதில் அமைதி ஏற்படுகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

படையெடுக்கும் பணக்காரர்கள்
ஒரு முறை முகம் பார்த்து ஆசி வாங்கிவிட்டால் அவருக்கு வாழ்வில் ஏறுமுகம்தான் என்பதால் பணக்காரர்கள் மூக்குப்பொடி சித்தரை மொய்க்கிறார்கள். வெளிநாட்டில் இருந்தும் ஏராளமானோர் இங்கே வருகிறார்கள்." என்று தெரிவித்தார் பரபரப்பாக.












Click it and Unblock the Notifications