தமிழர் வாழ்வாதார பிரச்சினைக்கு இணையாத திமுக-அதிமுக ரூபாய் அறிவிப்பிற்காக சேர்ந்தது ஏன்? வைகோ பொளேர்
காவிரி போன்ற வாழ்வாதார பிரச்சினைகளுக்கு இணையாத, திமுக-அதிமுக கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்க இணைந்தது ஏன் என வைகோ கேள்வி எழுப்பினார்.
சென்னை: தமிழர்கள் வாழ்வாதார பிரச்சினைக்கு இணையாத திமுக-அதிமுக கருப்பு பண பிரச்சினைக்காக இணைந்து நிற்பது அதிர்ச்சி தருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தமிழ் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் வைகோ மேலும் கூறியதாவது: அதிமுகவும், திமுகவும், காவிரி பிரச்சினைக்காக கை கோர்க்கவில்லை. தமிழர்கள் வாழ்வாதார பிரச்சினையில் இருவரும் கரம் கோர்த்து நிற்கவில்லை.
முதல் முறையாக அதிர்ச்சி தரத்தக்க வகையில், அதிமுக எம்பிக்களும், திமுக எம்பிக்களும், பொதுவுடமை கட்சி எம்பிக்கள், பண மதிப்பிழப்பு திட்டத்தை எதிர்க்க கூடிய காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் உள்ளிட்டோருடன் இணைந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே காந்தியார் சிலை அருகே போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால், மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதால்தான் போராட்டம் நடத்துவதாக கூறினால் கூட, மக்கள் வேறு எப்போதும் சிரமப்படவேயில்லையா? யுத்த காலம், வெள்ளக்காலங்களில் மக்கள் சங்கடப்படவில்லையா?
எத்தனையோ ராணுவ வீரர்கள் எல்லையில் உயிரை விடுகிறார்கள். அதுபோல, சங்கடங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிவருவது நெடுங்கால நன்மைக்காகத்தான்.
ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிப்பதற்கு அற்புதமான அதிரடி நடவடிக்கையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்திருக்கிறார். எனவே இதை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
தொழிலதிபர்களுக்கு 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை வைகோ ஏற்பாரா என முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளாரே என்ற தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த வைகோ, விடுதலை புலிகள் விஷயத்தில், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்கள் கருத்தை ஏற்கிறார்களா? என்னை பார்த்து கேள்வி கேட்டால் நானும் பதிலுக்கு கேட்க முடியும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.