தபால் வாக்குகளில் திமுக பின்னடைவைச் சந்தித்தது ஏன்...?
சென்னை: தபால் வாக்குகளில் பொதுவாக திமுகதான் முன்னிலை பெறும், அதிகம் வெல்லும். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக காணப்படுகிறது. காரணம், அதிமுக அதி வேதமாக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் போன்றோரின் வாக்குகள்தான் இந்த தபால் வாக்குகள். இவற்றை பெரும்பாலும் திமுகதான் அள்ளும். காரணம், அரசு ஊழியர்கள் மத்தியில் திமுக ஆதரவே பொதுவாக நிலவுகிறது என்பதால். ஆனால் இன்று அதிமுக அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இதனால் திமுக தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் உண்மையில் அரசு ஊழியர்களின் ஆதரவை திமுக இழந்து விட்டதா என்ற சந்தேகமும் வருகிறது. காரணம், தேர்தலுக்கு முன்பு தபால் வாக்குகளை வழங்குவதில் பெரும் குளறுபடி நடந்தது. பல இடங்களில் தங்களுக்கு தபால் வாக்குகளை அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை, வாக்குச் சீட்டுகள் தரப்படவில்லை என்று தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.
எனவே தமிழகம் முழுவதும் பெருமளவில் தபால் வாக்குகள் உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை என்று தெரிகிறது. எனவேதான் திமுகவுக்கு இதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.