ஐடி ரெய்டுக்கான காரணம் இதுதானாம்.. சரத்குமார் விளக்கத்தைப் பாருங்க!
ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதை தடுக்கவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை செல்வதை தடுக்கவே இந்த சோதனை நடைபெறுவதாக சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அத்தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆர்.கே.நகரில் சுமார் 150 கோடி ரூபாய் வரை ரொக்கப்பணம் புழங்கியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிப்பதாக சரத்குமார் கூறினார். இன்று முதல் பிரச்சாரத்திற்கு செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிரடி சோதனை
இன்று காலை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித்துறை சோதனையைத் தொடங்கியது. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடத்திருப்பது தொடர்பாகவே சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வீட்டிலும் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.
தொண்டர்கள் குவிந்தனர்
இன்று காலை முதல் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவரது இல்லத்தில் தொண்டர்கள் புகுந்தனர். மத்திய அரசை கண்டித்து சரத்குமார் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆதரவாளர்கள் போராட்டம்
இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே வந்து சரத்குமார் தொண்டர்களை சந்தித்தார். சரத்குமாரின் சமாதான முயற்சிக்குப் பின்னரும் அவரின் ஆதரவாளர்கள் கலையாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ அங்கு வந்து சரத்குமாரிடம் பேசினார்.
பிரச்சாரத்தை தடுக்க முயற்சி
செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார். தன்னுடைய வீட்டில் இருந்து எந்த ஆவணமோ பணமோ கைப்பற்றவில்லை என்றும் கூறிய அவர், ஆர்.கே. நகருக்கு தான் பிரச்சாரத்திற்கு செல்வதை தடுக்கவே வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றதாக கூறினார். மேலும் வருமான வரித்துறையினர் சோதனை குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 24 மணிநேரத்திற்குள் சரத்குமார் வீட்டில் ரெய்டு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.