போயஸ் கார்டன் கதவை ஜே.கே.ரித்தீஷ் தட்டியதன் பின்னணி…
சென்னை: போயஸ் கார்டன் கதவை ஜே.கே.ரித்தீஷ் தட்டியது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரட்சி நாயகன், அதிரடி மன்னன் என்ற அடைமொழிகளோடு முரட்டு மீசையுடன் சிட்டி ஆட்டோக்களில் பயமுறுத்தியவர் ஜே.கே.ரித்தீஷ்.
கோடம்பாக்கத்தின் கொடைவள்ளல் என்று சில காலம் கொண்டாடப்பட்டார். எப்படி இந்த பணம் என்று யோசிக்கத் தொடங்கியவர்களுக்கு அவர் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் பினாமியாக இருந்த போது கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டுதான் இப்படி தண்ணீராக செலவழிக்கிறார் என்று கூறப்பட்டது.
ராமநாதபுரம் எம்.பி
கடந்த லோக்சபா தேர்தலின் போது திமுக முகாமிற்கு மாறிய ஜே.கே. ரித்தீஷ்சிற்கு அழகிரி தயவில் எம்.பி சீட் கிடைக்கவே, பணத்தை கொட்டி கொட்டி செலவழித்து வெற்றி பெற்று டெல்லி நாடாளுமன்றத்திற்குள் அடி எடுத்து வைத்தார்.
கொட்டிக் கொடுத்த பரிசு
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுப.தங்கவேலன் தன்னுடைய தாத்தா என்று கூறித்தான் திமுகவில் அறிமுகமானார். ராமநாதபுரம் எம்.பி சீட்டுக்காக அழகிரிக்கும், அவரது மகள் கயல்விழிக்கும் ரித்தீஷ் கொடுத்த பரிசு கண்ணைச் சுற்ற வைத்ததாம். இதற்காக தாத்தா என்று கூறியவரையே எதிர்த்தார்.
ஆதரவும் எதிர்ப்பும்
ரித்தீஷின் படாடோப அரசியலால் கவரப்பட்ட அழகிரி, அவரை தனது ஆதரவாளராக்கிக் கொண்டார் அழகிரி. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் வீட்டுப் பக்கமே வரக்கூடாது என்று விரட்டியும் விட்டார்.
கனிமொழி ஆதரவு
இதைத் தொடர்ந்து கனிமொழி, ராசத்தி அம்மாள் வீட்டுக்கதவைத் தட்டினார் ஜே.கே.ரித்தீஷ்.
மீண்டும் அழகிரியுடன்
சில காலம் கழித்து மீண்டும் அழகிரியுடன் வந்து சேர்ந்தார் ரித்தீஷ். திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட பின்னர் அத்தனை செலவுகளும், ரித்தீஷ் தலையில்தான் விழுகிறதாம்.
நூற்றுகணக்கான கார்கள்
கடந்த மார்ச் 6ம் தேதி ராமநாதபுரம் வந்த அழகிரியை நூற்றுக்கணக்கான கார்களை வைத்தும், ஆட்களை வைத்தும் வரவேற்பு கொடுத்து அசத்தினார்.
வதைக்கும் வழக்குகள்
ஜே.கே.ரித்தீஷ் மீது நிலமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்காக பலமுறை தலைமறைவாக இருந்தார். சிலமுறை கைது செய்யப்பட்டு ஜாமீனிலும் வந்திருக்கிறார். கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே இப்போது அதிமுக ஆதரவு நிலை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அம்மா… வேண்டாம்மா…
ஆனால் ஜே.கே.ரித்தீஷை அதிமுகவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தில் இருந்து ஃபேக்ஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றனவாம்.