செம்மலை, செங்கோட்டையன், சி.வி. சண்முகத்தை ஜெ., அழைத்த காரணம் தெரியுமா?
சென்னை: அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணித் தலைவர்களான வலம் வந்த கே.ஏ. செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், செம்மலை ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா சில தினங்களுக்கு முன்னர் போயஸ்கார்டனுக்கு வரவழைத்து சந்தித்துள்ளார். சட்டசபை நெருங்கும் இந்த நேரத்தில் இம் முவருக்கும் கட்சியில் முக்கிய பதவி அளிக்கப் போகிறாராம் ஜெயலலிதா.
அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவில் 2ம் கட்ட நேர்காணல் கடந்த 21ம் தேதி தொடங்கியது. 10ம் நாளான நேற்று காலை விருதுநகர் தொகுதியைச் சேர்ந்த 4 பேரும் சேலம், ஈரோடு மாவட்ட தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களும் முதல்வர் ஜெயலலிதா இல்லத்துக்குச் சென்றனர். பிற்பகலில் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களும் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடுபட்டவர்கள் மற்றும் புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இன்று நேர்காணல் நடக்கும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 10 நாட்களில் 28 மாவட்டங்களுக்கான நேர் காணல் முடிந்துள்ளது.
நேர்காணல் நடத்தப்படாத தொகுதிகள்
சென்னையில் உள்ள தொகுதிகளுக்கு முழுமையாக நேர்காணல் நடக்கவில்லை. இதுதவிர, தேனி மாவட்டத்தில் போடி, திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவாரூரில் நன்னிலம் என குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு யாரும் அழைக்கப்படவில்லை.
புதுச்சேரி - கேரளா
விடுபட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதால் அந்த தொகுதிகளுக்கு யாரையும் அழைக்கவில்லை. புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கும் நேர் காணல் நடத்த வேண்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் நேர்காணல் நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது.
ஏப்ரல் 11ல் வேட்பாளர் பட்டியல்
ஏப்ரல் 2ம் வாரத்தில் அதாவது 11ம் தேதி நல்ல நாள் என்பதால் அன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கோட்டையனுக்கு அழைப்பு
போயஸ் கார்டனில் நடந்து வரும் நேர்காணலுக்கு நடுவே அதிமுகவில் ஒரு காலத்தில் முக்கிய தலைவர்களாக இருந்த 3 பிரபலங்களை வரவழைத்து ஜெயலலிதா சந்தித்துள்ளார். கே.ஏ. செங்கோட்டையன், சி.வி.சண்முகம், செம்மலை, ஆகியோரிடம் முக்கிய பொறுப்புகளை அளித்துள்ளாராம்.
முக்கிய பணி
செம்மலை, மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட இருக்கிறாராம். சி.வி.சண்முகம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் மாநில நிர்வாகிகள் பட்டியலில் இணைக்கப்பட இருக்கிறார்களாம். மூவரும் புதிதாக ஐவரணி குழுவில் இணைக்கப்படுகிறார்களாம்.
புதிய ஐவரணி
செங்கோட்டையன் ஓ.பி.எஸ்க்கு பதிலாக மாநில பொருளாளராக நியமிக்கப்பட இருக்கிறாராம். சி.வி.சண்முகம், பழனிப்பனுக்கு பதிலாக தலைமை நிலைய செயலாளராகவும் நியமிக்கப்படலாம் என்கிறது அதிமுக வட்டாராம். இனி அதிமுக ஐவர் குழு, வைத்திலிங்கம், தங்கமணி, செம்மலை, செங்கோட்டையன், சி.வி.சண்முகம் என அமையும் எனவும் பேசப்படுகிறது.
மும்மூர்த்திகள்
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். பெண் விசயத்தில் சிக்கியதால் அமைச்சர் பதவி, கட்சிப்பதவியில் இருந்து இறக்கப்பட்ட செங்கோட்டையன் கடந்த சில ஆண்டுகளாக ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளார். தற்போது ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளனர்.
செங்கோட்டையன் ரீ என்ட்ரி
சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் செங்கோட்டையனின் ரீ என்ட்ரி அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கடந்த 3 ஆண்டுகளாக கட்சி, அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு ஓரங்கட்டி வைக்கப்பட்ட சி.வி. சண்முகத்தின் வருகையும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் டூர் புரோகிராம்
செங்கோட்டையன்: ஜெயலலிதாவின் தேர்தல் டூர் புரோகிராம்களை வடிவமைப்பதில் இவரின் செயல்பாடு அசாத்தியமானது. நள்ளிரவில் அவரது பயணப்பாதையை நேரில் சென்று பார்த்து, திருப்தியடைந்த பின்தான் உறங்கச் செல்வார். இன்னும் சில நாட்களில் ஜெயலலிதா பிரச்சார பயணத்திற்கு கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இம்முறையும் டூர் புரோகிராமை செங்கோட்டையன் கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
செம்மலைக்கு பதவி
செம்மலைக்கு சமீபத்தில் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கடந்த தேர்தலின்போது, எம்.பி.யாக இருந்ததால், சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. இம்முறை எப்படியாவது சீட் வாங்கி, வெற்றி பெற்று மீண்டும் அமைச்சராகி விட வேண்டும் என்பதில், அவர் உறுதியாக உள்ளார்.
சேலம் வடக்குத் தொகுதியில் போட்டியிட செம்மலை மனு அளித்திருந்த நிலையில் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.