முதல்வராக இல்லாத ஓபிஎஸ்ஸை சந்திக்கும் மோடி விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன்.. பிரேமலதா கேள்வி
முதல்வராக இல்லாத ஓபிஎஸ்ஸை சந்திக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளை ஏன் சந்திக்க மறுக்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேம லதா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்திக்கும் பிரதமர் மோடி விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை ஏன் சந்திக்க மறுக்கிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
பயிர்க் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் 41 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமரை சந்திக்க விவசாயிகள் தொடர்ந்து நேரம் கேட்டும் மோடி கொடுக்கவே இல்லை. இதுகுறித்து பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
விவசாயிகளை சந்திக்க மறுப்பதேன்?
ஓபிஎஸ் மாநிலத்தில் முதல்வராக இல்லை. எந்த அடிப்படையில் அவரை மோடி சந்திக்கிறார். ஓபிஎஸ்ஸை சந்திப்பவர் ஏன் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார். ஏன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்திக்க மறுக்கிறார்?
மோடிக்கு ஐடியா
ஒரு பிரதமராக மோடி நடுநிலையோடு செயல்படுவதே நல்லது. ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதே போன்று மோடி நாட்டுக்காக செய்ய வேண்டிய வேலை அதிகம் இருக்கிறது. அதில் அவர் கவனம் செலுத்தலாம்.
அதிமுக உட்கட்சிப் பூசல்
அதைவிட்டு அதிமுகவில் நடைபெறும் உட்கட்சிப் பிரச்சனையில் மோடி ஈடுபடுவது சரியல்ல. பிரதமருக்கு என்று சில நடைமுறை திட்டங்கள் இருக்கிறது. அதை அவர் செய்துவிட்டுப் போகலாம் என்று பிரேமலதா கூறினார்.
விவசாயிகளுடன் சந்திப்பு
விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, பிரேமலதா டெல்லி சென்று அய்யாக்கண்ணுவை சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகள் நடத்திய தரையில் சோறு போட்டு உண்ணும் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.