நடிகர் ரித்தீஷை மதுரையில் களம் இறக்குகிறாரா மு.க.அழகிரி
மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. அழகிரியின் தீவிர விசுவாசியான ரித்தீஷ் களம் களம் இறங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் ரித்தீஷை விட்டு கலகலப்பான ஒரு கலவரத்தை ஏற்படுத்த அழகிரி மறைமுகமாக திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ரித்தீஷை களம் இறக்கினால் தனது பணபலம் மற்றும் ஆள் பலத்தால் திமுகவினரை நிலை குலையச் செய்வார் என்றும் இதன் மூலம் திமுகவை விட தாங்களே பலமானவர்கள் என்பதை கட்சித் தலைமைக்கு எடுத்துக் காட்டவும் அழகிரி நினைப்பதாக சொல்கிறார்கள்.
சஸ்பெண்ட் அழகிரி
திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரிக்கும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையே கட்சியில் மோதல் வெடித்தது. இதில் பல்வேறு காரணங்களுக்காக, மு.க.அழகிரியை திமுக தலைமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
வருத்தம் தெரிவிக்காமல் தலைவர்களைச் சந்தித்த அழகிரி
தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி இணைவார் என்று தான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதிரடி அரசியல் செய்து பழக்கப்பட்ட மு.க. அழகரி, பிரதமர் மன்மோகன் சிங், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மதிமுக பொதுச் செயலாளர் வைோ என பல முன்னணி தலைவர்களை சந்தித்து திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
பிரமாண்ட பிறந்த நாள் விழா
இந்த நிலையில், திமுக தலைமையின் எச்சரிக்கையையும் மீறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழாவை ஒட்டி திமுக எம்.பி.க்கள் நெப்போலியன், கே.பி.ராமலிங்கம், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரையில் ரித்தீஷ்
ரித்தீ்ஷ் தற்போது, ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவருக்கு திமுக சீட் தரவில்லை. நெப்போலியனுக்கும் சீட் இல்லை. இந்த நிலையில் ரித்தீஷை மதுரையில் கோதாவில் மு.க. அழகிரி களம் இறக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணன் சொன்னால் ரெடி...
ரித்தீஷும் அண்ணன் கட்டளையிட்டால், எத்தனை கோடி செல்வு செய்தாவது வெற்றியை அண்ணன் காலடியில் சமர்ப்பிப்பேன் என சபதமே போட்டுள்ளாராம்.
மறைமுகமாக பலரும்
இதே போல, தென் மாவட்டங்களில் பல தொகுதிகளிலும் அழகிரி தனது ஆதரவாளர்களை போட்டி வேட்பாளர்களாக களம் இறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வருகிறது.இரு்பபினும் திமுகவுக்கு எதிராக தான் செயல்படப் போவதாக இதுவரை அழகிரி வெளி்ப்படையாக சொல்லவில்லை. ஆனால் திமுகவை நிலை குலைய வைத்து ஸ்டாலினுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த அவர் நிச்சயம் முயல்வார் என்பது வெளி்ப்படையாகவே தெரிகிறது.
பீதியில் வக்கீல் வேலுச்சாமி
மதுரை திமுக வேட்பாளராக வக்கீல் வேலுச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது முதல் கவலையே அழகிரியால் எங்கே தனது வெற்றி வாய்ப்பு மேலும் சிக்கலாகி விடுமோ என்பதுதானாம்.