தேசத்துரோக வழக்கு... வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் ‘இடிந்தகரை’ உதயகுமார் கைது?
இடிந்தகரை: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருக்கிணைப்பாளரான சுப.உதயகுமார் லோக்சபா தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்ய நாகர்கோவில் வரும் போது கைது செய்யப் படும் சூழல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக சுப.உதயகுமார் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி வேட்பாளராக உதயகுமார் அறிவிக்கப் பட்டுள்ளார்.
கடந்த 18ம் தேதி தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து தன் தந்தை பரமார்த்த லிங்கம் மற்றும் மனைவி மீராவை நாகர்கோவில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு அனுப்பி தனது தேர்தல் அறிக்கையை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் வெளியிடச் செய்தார் உதயகுமார்.
மேலும், வரும் 29ம் தேதி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது பிரசாந்த் பூஷன் தலைமையில் உதயகுமார் நாகர்கோவிலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் குமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், இடிந்தகரையிலிருந்து வேட்புமனுத் தாக்கல் செய்ய வெளியே வரும் உதயகுமாரை போலீசார் கைது செய்வார்களா.. இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார் ரமேஷ்.
ஒருவேளை வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் உதயகுமாரன் கைது செய்யப்பட்டால் அது தொடர்பாக ஆம் ஆத்மி எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் எனக் கேட்கப்பட்டதற்கு, ''நாகர்கோவிலில் உதயகுமாரன் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது கைதுசெய்யப்பட முயன்றால், கட்சியின் சட்ட வல்லுநர்களை வைத்து அதைத் தடுத்து எங்கள் வேட்பாளருக்கு அரணாக இருப்போம். மேலும் பிரசாந்த் பூஷண் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்செய்ய வாய்ப்புகள் உள்ளது. அவர் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் என்பதால், அன்று எந்தவித கைது நடவடிக்கையையும் எதிர்கொண்டு, வேட்புமனுத் தாக்கல் சிக்கல் இன்றி முடியும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இடிந்தகரை கிராம மக்களின் ஆதரவு தங்களுக்குப் பெரும்பான்மையாக இருப்பதாகவும், உளவுத் துறையும் மற்றக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு சிலரும்தான், போராட்டக் குழுவினர் அரசியலில் இறங்கியதை எதிர்த்தும் போராட்டக் குழு இரண்டாக உடைந்து விட்டதாகவும் விதவிதமான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார் உதயகுமாரின் மனைவி மீரா.
இது தொடர்பாக செய்திநிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ‘எங்களுக்கு அரசியல் வழியைக் காட்டியதே அங்குள்ள மக்கள்தான். போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லவே மக்களின் ஆதரவோடு அரசியலில் இறங்கியிருக்கிறோம். ஒவ்வொரு தரப்பு மக்களுடனும் நீண்ட நாட்கள் பேசி அவர்களோட கருத்துகளையும் கேட்டு, பெரும்பான்மை மக்கள் எடுத்த முடிவின் அடிப்படையில்தான், என் கணவர் அரசியலில் இறங்க முடிவெடுத்தார். முதலில் நானும் அவரும் அரசியல் வேண்டாம் என்றுதான் இருந்தோம். இந்த மூன்று ஆண்டு கால மக்கள் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாததால்தான், இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அதிகாரத்தில் பங்கெடுத்துக் குரல் கொடுக்கத்தான் அரசியல் பிரவேசம். மற்றபடி எந்தக் காரணமும் இல்லை.
கூடங்குளத்தை விட்டு வெளியில் வரும் அவரைக் கைதுசெய்தால் கஷ்டம்தான். இதுவரை எல்லாம் நல்லமுறையாகத்தான் நடந்துவருகிறது. இனியும் நல்லதாகத்தான் அமையும். அதனால, அவர் கைதாவார் என்ற கெட்டதை சிந்தித்துப் பார்க்கவில்லை'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள சட்டத்தின் படி, ஒருவர் கொடூரக் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஆனால், கூடன்குளம் போராட்டம் தொடர்பாக உதயகுமாரன் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் இந்த சட்டப் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் மட்டுமே, உதயகுமாரின் அரசியல் பிரவேசத்துக்கு அது பாதகமாக அமையும். மற்றபடி அவர் தேர்தலில் போட்டியிடத் தடை ஏற்படும் வாய்ப்பு குறைவுதான்.
ஒரு வருடத்துக்கு முன்பு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம், 'கூடங்குளம் போராட்டம் என்பது பொதுமக்கள் போராட்டம். தமிழக அரசு அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து கூடங்குளத்தில் எந்தவொரு கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனபோதும், இடிந்தகரையிலிருந்து வெளியே வரும் உதயகுமாரன் கைது செய்யப் படுவாரா இல்லையா என்ற கேள்விக்கு பதில் வேட்புமனுத் தாக்கல் அன்று தான் தெரியவரும்.