கை கொடுத்த காற்றாலைகள் 3000 மெகாவாட் மின் உற்பத்தி… உடுமலையில் அதிகம்… தேனியில் குறைவு!
சென்னை: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் தமிழகத்தின் மின் தேவையை சமாளிக்க உதவுகிறது. காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த உற்பத்தி 13 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. கடந்த 12ம் தேதி அதிகபட்சமாக 13,112 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது உடுமலை பகுதியில் காற்றின் வேகம் வினாடிக்கு 13 மீட்டர் வேகத்திற்கு மேல் வீசுவதால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,100 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேநேரத்தின் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 12,764 மெகாவாட்டாக இருந்த உச்சபட்ச மின்தேவை, 2014-15ம் ஆண்டில் 13,775 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. மின்நுகர்வும் 281.20 மில்லியன் யூனிட்டில் இருந்து 293.969 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், தேவைக்கேற்ப மின் உற்பத்தித் திறனும் 11,884.44 மெகாவாட்டில் இருந்து 13,366 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை 40 சதவீதத்துக்கும் அதிகமான மின்சாரம் அனல் மின்நிலையங்களில் இருந்து கிடைக்கிறது. ஆனால், ஜூன் முதல் அக்டோபர் வரையில் அதிகப்படியான மின் சாரம் காற்றாலைகளில் இருந்து பெறப்படுகிறது. காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தற்போது தமிழகத்தின் மின் தேவையை சமாளிக்க உதவி வருகிறது.
காற்றாலை மின் உற்பத்தி
இந்தியாவில் தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, தேனி மாவட்டங்களில் காற்றாலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கடைசி வாரத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும்.
திருப்பூர் மாவட்ட காற்றாலைகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள காற்றாலைகளில் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலங்களில் அதிக அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 3 ஆயிரம் மெகாவாட் திறனுடைய 5,012 காற்றாலைகள் இயங்கி வருகின்றன.
அதிகரித்த காற்றின் வேகம்
உடுமலையில் 200 கிலோ வாட் திறன் முதல் 2,100 கிலோ வாட் திறனுடைய காற்றாலைகள் இயங்கி வருகிறது. வினாடிக்கு 3 மீட்டர் வேகத்தில் காற்று வீசினால், காற்றாலைகள் தானாக இயங்கத்தொடங்கும். வினாடிக்கு 13 மீட்டர் வேகத்தில் காற்று வீசும்போது காற்றாலைகள் முழு திறனுடன் மின் உற்பத்தி செய்யும்.
மின் உற்பத்தி அதிகம்
தற்போது உடுமலை பகுதியில் காற்றின் வேகம் வினாடிக்கு 13 மீட்டர் வேகத்திற்கு மேல் வீசுவதால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,100 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மே மாதம் இறுதி வாரத்தில் சராசரியாக 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
1,100 மெகாவாட்
அதன்பின்னர் படிப்படியாக 500 மெகாவாட் உயர்ந்து, தற்போது 1,100 மெகா வாட்டாக அதிகரித்து உள்ளது. காற்றாலையில் இருந்து பெறப்படும் மின்சாரம் உடுமலை பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.
கைவிட்ட அனல் மின்நிலையங்கள்
கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள வல்லூர், வடசென்னை அனல் மின்நிலையங்களில் அடிக்கடி கொதி கலன் குழாய் வெடிப்பு, தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் சில நேரங்களில் அறிவிக்கப்படாத மின் தடை நிலவியது. இந்நிலையில், சமீபத்தில் மின் உற்பத்தி அதிகரித்ததால் தொழிற் சாலைகளுக்கான மின் கட்டுப்பாடு முற்றிலும் நீக்கப்பட்டது.
கை கொடுத்த காற்றாலைகள்
தற்போது காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த உற்பத்தி 13 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. கடந்த 12ம் தேதி அதிகபட்சமாக 13,112 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது இதில், அனல்மின் நிலையங்களில் இருந்து 3,040, மத்திய தொகுப்பில் இருந்து 4,005, காற்றாலைகளில் இருந்து 1,849 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது.
நிம்மதியில் அனல் மின்நிலையங்கள்
சனிக்கிழமையன்று காற்றாலைகளில் இருந்து அதிகபட்சமாக 3,005 மெகாவாட்டும்,மத்திய தொகுப் பில் இருந்து 3,424 மெகாவாட்டும் கிடைத்துள்ளது. காற்றாலை மின்சாரம் அதிகரித்துள்ளதால் மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தி, பராமரிப்பு பணிகளை மின்வாரியம் தொடங்கியுள்ளது. ஆனால், வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. காற்றாலை கைகொடுப்பதால் மின் தடை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்ட காற்றாலைகள்
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று இன்னும் சரியாக வீசத்தொடங்கவில்லை என்பதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் காற்றாலைகள் ஓய்வெடுத்து வருகின்றன. கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு மின் உற்பத்தி குறைந்து போனதாக கவலை தெரிவித்துள்ளனர் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள். தேனி மாவட்டத்தில் மட்டும் 420 காற்றாலைகள் உள்ளன. இதுவரை 330 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டு 430 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.