போரூர் கட்டட விபத்து: பெண் எஸ்.ஐ.யின் சகோதரரின் உடல் மீட்பு
சென்னை: சென்னையில் நடந்த கட்டட விபத்தில் சப் இன்ஸ்பெக்டரின் சகோதரர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் சகோதரர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருபவர் குணவதி.
இவர் மவுலிவாக்கத்தில் கட்டட விபத்தில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 11.15 மணியளவில் அவர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு ஆண் சடலத்தை அருகில் இருந்த அதிகாரிகள் மீட்டனர். அந்த சடலத்தை அதிகாரிகள் அமரர் ஊர்தியில் ஏற்ற முயன்றபோது, அது தன்னுடைய சகோதரர் லோகநாதன் (45) என்பது தெரிந்து குணவதி அதிர்ச்சியடைந்தார். சகோதரரின் சடலத்தை பார்த்து கதறி அழுதார்.
லோகநாதன், அந்த கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இருந்துள்ளார். சனிக்கிழமைதான் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பள நாளாகும் என்பதால், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
அப்போதுதான் அவர் விபத்தில் சிக்கி விட்டார். ஆனால் அது தெரியாமல் லோகநாதனைக் காணவில்லை குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டதால் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.