மதுக் கடையை இழுத்து மூடு.. வரிந்து கட்டிக் களத்தில் குதித்த பெண்கள்.. 2வது நாளாக வீரப் போராட்டம்!
தென்காசி: நெல்லை மாவட்டத்தில் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
பெண்களின் இந்தப் போராட்டம் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சுரண்டை அருகேயுள்ள பரங்குன்றாபுரம் கிராம பகுதியில் ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு கடையைத் திறந்துள்ளனர்.
இந்தக் கடையாநது விளைநிலங்களுக்கு செல்லும் வழியில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குடிமகன்கள் கூட்டம் அலை மோதுகிறது
கடை 7ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் இக்கடைக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெண்கள் தனிமையில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடையை மூடு
இதையடுத்து இந்தக் கடையை மூடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வழக்கம் போல அதிகாரிகள் டாஸ்மாக் கடையை அகற்றிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நேற்று முதல் போராட்டம்
பொறுத்துப் பார்த்த பெண்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடையை மூட விட்டால் தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விரட்டியடித்தனர்
பெண்களின் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் குடிப்பதற்காக திரண்டு வந்த குடிகாரர்களை பெண்கள் மொத்தமாக கூடி விரட்டியடித்தனர். இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video


மின்சாரத்தைத் துண்டிக்கும் அதிகாரிகள்
இரவு பகலாக பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இரவு நேரங்களில் அதிகாரிகள் துணையோடு மின்சாரத்தை துண்டித்து பெண்களை அச்சுறுத்தப் பார்ப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இருப்பினும் கடையை மூடும் வரை விடாமல் போராடுவோம் என பெண்கள் கூறி விட்டனர்.











Click it and Unblock the Notifications