எண்ணெய்...உப்பெல்லாம் இதய தினமான இன்னைக்கே குறைக்க ஆரம்பிங்க - உங்க ஆயுளுக்கு நாங்க கேரண்டி!
சென்னை: மனித வாழ்க்கையின் அடித்தளமாக விளங்கும் இதயத்தினைப் போற்றும் நாளாக இன்று "உலக இதய தினம்" கொண்டாடப்பட்டது.
இந்த தினத்தில் இதயத்தை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.
மனிதர்களின் உயிர் காக்கும் உறுப்பு இதயமாகும். இன்றைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே பலருக்கும் இதய நோய் வந்துவிடுகிறது.
மன உளைச்சலே காரணம்:
வேலைப்பளுவினால் ஏற்படும் மன உளைச்சல் இதற்கு பிரதான காரணம் என்று கூறப்படுகிறது. இது தவிர சிறுவயதிலேயே மது புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை என்பனவும் இதய நோய்க்கு காரணமாக அமைகின்றன.
உலக இதய தினம்:
இளைய தலைமுறை இவற்றை உணர்ந்து தம்மை இதய நோயிலிருந்த காத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களில் கட்டுப்பாடு இருந்தாலே இதயத்தைப் பாதுக்காக்கலாமாம். எண்ணெய், உப்பு, காரம், கொழுப்பு பொருட்களை ஒரு வயதிற்கு மேல் குறைத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
இதய நோய்களுக்கு காரணம்:
மாரடைப்பு ஏற்படும் 100 பேரில் 20 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 50, 60 வயதுகளில் வந்த இதய நோய், தற்போது 30 வயது இளைஞர்களுக்கே வருகிறது. வாழ்க்கை முறை மாற்றம், மாறி வரும் உணவுப் பழக்கத்தால் ஏற்படும் உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகை மற்றும் மதுப்பழக்கம் போன்றவை இதய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
பாதுகாப்பு இன்றே அவசியம்:
ஆண்டுதோறும் உலகளவில் ஒரு கோடியே 73 லட்சம் இதய நோயினால் மட்டுமே உயிரிழக்கின்றனர் என்று ஒரு அறிக்கைத் தெரிவிக்கிறது. எனவே, இதயத்தை எப்படியெல்லாம் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று இளைய தலைமுறையினரும், முதியவர்களும் மருத்துவரைக் கலந்தாலோசித்து, இதய நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இன்றே மேற்கொள்வது மிக அவசியமான ஒன்றாகும்.