"வாட்ஸப்” தேர்தல் கருத்துக்களுக்கு ஒரு மாதம் சிறை என்பது தவறான தகவல்- ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழகத்தில் தேர்தல் பரபரப்புகள் களை கட்டத் துவங்கியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து இழிவான தகவல்களை வெளியிட்டால் ஒரு மாதம் சிறைத்தண்டனை என்ற தகவல் தவறானது என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "பொது வாழ்வுக்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட முறையில் அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் தொண்டர்களைப் பற்றி விமர்சிப்பதை தவிர்க்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதுதான் சரியான தகவல்" என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாவிட்டால் என்ன நடவடிக்கை என்ற வேறொரு கேள்விக்கு அளித்த பதிலில் செக்ஷன் 188ன் படி நடவடிக்கை எடுக்க வழி இருப்பதாக லக்கானி கூறியுள்ளார். இதுதொடர்பாக, சம்பந்தமில்லாத வகையில் வெளியான செய்திகளால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. அதுபோல எந்த அறிக்கையும் தரப்படவில்லை என்று அவர் விளக்கியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களை, பொதுமக்கள் தெரிவிக்க அந்தந்த மாவட்டங்களில் தனியாக வாட்ஸ்அப் எண் தரப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 106 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications