நெல்லை மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி? ரயில் முன்பு பாய்ந்து ஒருவர் தற்கொலை
நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கந்துவட்டி கொடுமை தலைதூக்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பு குறைவு. மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயத்திலும் உரிய லாபம் கிடைக்காததால், பலர் கூலி வேலைகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

கூலி தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்களை அதிகம் உள்ளடக்கிய இம்மாவட்டத்தில் கந்துவட்டியும், ரியல் எஸ்டேட்டும் பூதாகரமான பிரச்னையாக உள்ளது. தொழிலாளர்கள் சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக சுரண்ட கந்துவட்டி தொழில் காரணமாக அமைகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் கீழ கடையம் பகுதியை சேர்ந்தவர் பாபு என்ற பாலமுருகன். இவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு குடும்பச் சுமை காரணமாக குழுக்கள் மற்றும் வெளிநபர்களிடம் ஏராளமான அளவுக்கு கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர் கடந்த சில நாட்களாகவே மிகவும் மனமுடைந்து கானாப்பட்டதாக கூறப்ப்டுகிறது.
இந்நிலையில் பாலமுருகன் நேற்று இரவு நெல்லையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தகவல் அறிந்த தென்காசி ரயில்வே போலீசார் இன்று காலை சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் உயிரிழந்த பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications