வைரலாகும் #StandasTamilan... சிம்பு அழைப்பை ஏற்று வீட்டு முன் மவுனமாய் நின்ற யுவன்!
நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட சிம்பு விடுத்த அழைப்பு தமிழகத்தில் பெரிய அளவில் உணர்வுப் பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இதுகுறித்து சிலர் முணுமுணுத்தாலும், பெருமளவிலான மக்கள் சிம்புவைப் பாராட்டி, அவருடன் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு பலரும் சாலை ஓரங்களில், தங்கள் வீடுகளின் எதிரில், பொது மைதானங்களில் மவுனமாக நின்று தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
கால்கள் இல்லாத மாற்றுத் திறனாளி ஒருவர், ஊன்று கோல்களின் உதவியுடன் நின்று தன் ஜல்லிக்கட்டு ஆதரவைக் காட்டியதோடு, அதை ட்விட்டரில் வெளியிட்டு #Standas Tamilan என்ற கீச்சையும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த பலரும் நெகிழ்ந்துபோய் தங்களின் பங்களிப்பைக் காட்டியுள்ளனர்.
சிம்புவின் நண்பரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு விடுத்த போராட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டு தனது நுங்கம்பாக்கம் அலுவலகம் முன்பாக நின்றார். அவருடன் அலுவலக ஊழியர்களும் இணைந்தனர்.
இன்று பிற்பகலுக்குப் பிறகு #StandasTamilan என்ற ஹேஷ்டேக் வைரலாகப் பரவியது. பலரும் அதைப் பயன்படுத்தினர் தங்கள் ட்வீட்டுகளில்.