தஞ்சையில் பயங்கரம்! வியாபாரிகளிடம் மாமூல் கேட்ட ரவுடிகள்! தட்டிக்கேட்ட இளைஞர் வெட்டிக் கொலை!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வியாபாரிகளை மிரட்டி மாமூல் கேட்ட ரவுடிகளை தட்டிக்கேட்ட இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் டவுண் பகுதியில் உள்ள அக்ரஹாரம் வீதியில் அதிக அளவில் மீன் கடைகள் இருக்கின்றன. இங்கு சில ரவுடிகள் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதையும், பணம் தராத வியாபாரிகளை தாக்குவதையும் வழக்கமாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்கிருந்த மீன் வியாபாரிகளை விஸ்வபிரசாத் (35) என்ற ரவுடி மாமூல் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பிரேம்குமார் (27) என்ற இளைஞர் விஸ்வபிரசாத்தை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து விஸ்வபிரசாத் சென்றுவிட்டதாக தெரிகிறது.
மார்க்கெட்டில் அனைவரின் முன்பும் பிரேம்குமார் தன்னை தட்டிக் கேட்டதால் ரவுடி விஸ்வ பிரசாத்துக்கு அவமானம் ஆகியுள்ளது. பிரேம்குமாரை தீர்த்துக்கட்டினால் தான் இனி நம்மால் மார்க்கெட்டுக்கு செல்ல முடியும் என அவர் கருதியுள்ளார். இதனால் பிரேம்குமாரை கொலை செய்ய தனது கூட்டாளிகளுடன் விஸ்வபிரசாத் திட்டம் தீட்டினார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளிய அக்ஹாரம் புறவழிச்சாலையில் உள்ள மதுபானக் கடையில் விஸ்வபிரசாத் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் (36) ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பிரேம்குமார் நடந்து சென்று கொண்டிருந்தார். இதையடுத்து, அவரை வழிமறித்த விஸ்வபிரசாத்தும், மணிகண்டனும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த விஸ்வபிரசாத்தும், மணிகண்டனும் பிரேம்குமாரை வெட்டினர். இதில் காயமடைந்த பிரேம்குமார் உயிரை காப்பாற்ற அங்கிருந்து ஓடினார். ஆனால் அவரை விடாமல் துரத்திய விஸ்வபிரசாத், மணிகண்டன் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பிரேம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவறிந்ததும் பிரேம்குமாரின் உறவினர்களும், அவரது பகுதியைச் சேர்ந்த மக்களும் அங்கு திரண்டு வந்தனர். மேலும், கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி தஞ்சை - கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார் என உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
மீன் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தகராறு செய்த ரவுடியை தட்டிக் கேட்ட இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புண்ணியம் தரும் புரட்டாசி..ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்..நாளை 6 மணி நேரம் தரிசனம் ரத்து