ஒரே பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள்- தேனி மாவட்டத்தில் பரபர!
தேனி : தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 33 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பள்ளி மூடப்பட்டு அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக வழக்கமான செயல்பாடுகள் அனைத்தும் நிலையில், தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில்
தமிழகத்தின் தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாக சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்துள்ளது.

ஒரே பள்ளியில் 33 பேருக்கு
இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 33 மாணவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தீவிர பாதிப்பு இல்லாததால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி வளாகம் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளின் சுகாதாரத்துறையினரால் கொரோனா தடுப்புப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

தற்காலிக விடுமுறை
மேலும், பள்ளி உடனடியாக மூடப்பட்டு அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. பள்ளிகளில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு தற்காலிக விடுமுறை அளிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரத்திலும்
கடந்தவாரம் இதேபோல ஆண்டிபட்டி நகரில், கடைவீதி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரே பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அப்பகுதியில் மாணவர்கள், பெற்றோர்கள் இடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சுற்றுவட்டார பகுதிகளிலும்
இந்த நிகழ்வுகளை அடுத்து தேனி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரே பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications