கார்த்திகை தீப விழா.. 150 ரவுடிகளுடன் கோயிலுக்கு வந்த தங்கதமிழ்ச் செல்வன்.. ஜெயபிரதீப் குற்றச்சாட்டு
தேனி: தேனி கைலாசப்பட்டியில் உள்ள கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய போது திமுகவினருக்கும் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் இடையே என்ன பிரச்சினை நடந்தது என்பது குறித்து ஜெயபிரதீப் வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.
தேனி கைலாசப்பட்டியில் உள்ள கோயிலில் கார்த்திகை தீபத்தை யார் ஏற்றுவது என்று ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் தங்கதமிழ்ச் செல்வன்- எம்எல்ஏ சரவணன் தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உண்மையில் அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: அருள்மிகு கைலாசநாதர் கோயில் தீபத் திருவிழா கடந்த 14 ஆண்டுகளாக அன்பர் பணி செய்யும் பரமரிப்பு குழுவினரால் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதை அறிந்து அந்த திருவிழாவுக்கு ஊறு விளைவிப்பதற்காக தேனி மாவட்ட திமுகவினரும் பெரியகுளம் சட்டசபை உறுப்பினர் சரவணனும் மிக அநாகரீகமாக நடந்து கொண்டனர். இந்த திருவிழா நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, கள்ளிப்பட்டி, கைலாசப்பட்டி, தேனி, பெரியகுளம், தாமரை குளம் போன்ற ஊர்களில் இருக்கும் பக்தர்களை அழைத்து திருவிழாவை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்துவோம்.
அண்ணாமலையார் கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்த துவாரபாலகர் சிலையின் முகத்தில் துளை! பக்தர்கள் வேதனை
திருகார்த்திகை தீபம்
அதன்படி இந்த ஆண்டும் கூட்டம் போட்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த விழாவுக்கு பத்திரிகையடிக்க கோயிலின் நிர்வாக இயக்குநரிடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் 15 நாட்களாக எந்த பதிலும் இல்லை. அதனால் அன்பர் பணி செய்யும் குழுவினரால் பத்திரிகை அடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன.
அழைப்பிதழ்
அப்போது பத்திரிகைகளை இங்கு விநியோக் செய்யக் கூடாது என கூறி அனைத்து பத்திரிகைகளையும் பறித்துக் கொண்டார்கள். பின்னர் அன்பர் பணி செய்யும் குழுவின் செயலாளர் சிவக்குமார அழைத்து பெரியகுளம் எம்எல்ஏ சரவணன்தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என சொன்னார்கள். இதற்கு சிவக்குமார், நாங்கள் 15 ஆண்டுகளாக எங்களுடன் பணியாற்றிய சிவதொண்டனாக பணியாற்றிய ஓபிஎஸ்தான் வழிமுறைகளை கற்றுக் கொடுத்தார்.
கோயில் கட்டுதல்
இந்த கோயில் கட்டுவதற்கான அனைத்து நற்காரியங்களுக்கும் உதவிகளை செய்தார்கள். எனவே ஓபிஎஸ்தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என கூறி பக்தர்கள் கூடி முடிவு எடுத்துள்ளோம். எனவே எம்எல்ஏ சரவணன் தீபம் ஏற்றுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிவிட்டார். பிறகு கோயிலின் நிர்வாக அதிகாரியிடம் நெருக்கடி கொடுக்கப்பட்டது. எனவே திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடத்த வேண்டும் என்பதால் நாங்கள் கோயிலின் பூசாரியே தீபத்தை ஏற்றட்டும் என விட்டுக் கொடுத்தோம்.
பெரியகுளம் எம்எல்ஏ
தீபத் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன், கோயிலின் நிர்வாக அதிகாரி ஆகிய மூவரிடமும் ஆலோசனை கொடுங்கள் என கேட்டோம். ஆனால் அவர்கள் மூவருமே தீபத் திருவிழா நாளன்று வரை எந்த ஆலோசனையையும் கூறவில்லை. இன்று (நேற்று ) காலை கூட அவர்களை தொடர்பு கொண்டு எப்போது வருகிறீர்கள் என கேட்டோம். ஆனால் அவர்கள் பதில் சொல்லவில்லை. கார்த்திகை தீபத்தை ஏற்றும் போது 150க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் தேனி மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் , எம்எல்ஏ சரவணன் ஆகியோர் கோயில் நிர்வாக அதிகாரியை மிரட்டி, சரவணன்தான் தீபம் ஏற்ற வேண்டும் இல்லாவிட்டால் நீங்களே ஏற்றுங்கள் என்றனர்.
12 ஆண்டுகள்
ஆகம விதிகளின்படி கடந்த 12 ஆண்டுகளாக ராஜா பட்டர் சுவாமிகள் இந்த திருவிழாவை நடத்திக் கொண்டு வருகிறார். சிவனுக்கும் அம்பாளுக்கும் அகல் விளக்கம் ஏற்றி தீபாராதனை காட்டிய பிறகு உற்சவர் வலம் வந்து தீபத்தின் முன் சுவாமியை நிறுத்தி அப்போது மக்களின் கரகோஷத்துடன் தீபம் ஏற்றுவதுதான் வழக்கம். ஆயினும் நாங்கள் தங்கதமிழ்ச் செல்வனையும் சரவணனையும் அழைத்து வந்து பரிவட்டம் கட்டிக் கொள்ளுங்கள். தீபத்தை ஐயர் ஏற்றட்டும் என அழைத்தோம். ஆனால் அதை கேளாமல் அவர்களாகவே ஒரு தீப்பந்தத்தை எடுத்து வந்து தீபத்தை ஏற்ற முயன்றார்கள். அப்போது சிவன், அம்பாளுக்கு ஏற்றிய அகலில் இருந்துதான் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீங்கள் செய்வது தவறு என்றும் ராஜா பட்டர் சுவாமிகள் தடுத்தார். பின்னர் ராஜா பட்டர் தீபத்தை ஏற்றும் போது அவர்கள் தடுத்தார்கள். ஆனால் கடவுளின் பிரசித்தியால் தீபத்தை ராஜா பட்டர் சுவாமிகள் நல்லபடியாக ஏற்றினார். இவ்வாறு ஜெயபிரதீப் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.