புலியை விட்டுட்டு எலியை பிடிக்குறாங்க! ஓபிஎஸ் வாரிசுக்கு எதிராக திரண்ட தேனி! விட மாட்டாங்க போலயே?
தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள சொர்க்க வனம் பகுதியில் கடந்த மாதம் சிறுத்தை இறந்த விவகாரத்தில் ஆட்டு கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், ஓபிஎஸ் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் ஓபிஎஸ் மகனான எம்.பி. ரவீந்திரநாத்க்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தின் சோலார் மின்வெளியில் சிக்கி சிறுத்தை ஒன்று சில வாரங்களுக்கு முன்பு உயிர் இழந்தது.
இந்தச் சம்பவம் தான் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சர்ச்சையாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலர்கள், ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கடுமையாக தாக்கி அவரை கைது செய்துள்ளனர்.
பாதியிலேயே அறுந்து போன ’ரீல்ஸ்’! சட்டென முடங்கிப் போன இன்ஸ்டாகிராம்! மெட்டாவுக்கு நேரம் சரியில்லையோ?
ரவீந்திரநாத் எம்.பி.
மேலும் ரவீந்திரநாத் தோட்டத்தில் பணியாற்றும் மேலாளர்களான ராஜவேல், தங்கவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், வனத்துறையினர் தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவரின் தோட்ட தொழிலாளர்களை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக வனத்துறை அதிகாரிகள் செயல்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.
வலுக்கும் கண்டனம்
வனத்துறையினரின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பவர்கள் சங்கத்தின் சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், ஆட்டுக்கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கூறியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
களமிறங்கிய திமுக
இதனிடையே ஓபிஆர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பிலும் தங்க தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்த நிலையில், இதைத்தொடர்ந்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தின் மேலாளர் தங்கவேல் ராஜவேல் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் ஓபி ரவீந்திரராத் குமாரைக் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை பல நாட்களாக முன்வைக்கப்படுகிறது.
முற்றுகைப் போராட்டம்
இந்நிலையில் இந்த நிலையில் ஆடு மேய்த்த அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இன்று தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் பெரியகுளம் சாலையில் உள்ள பெத்தாச்சி விநாயகர் கோவில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 'உண்மை குற்றவாளியை' காப்பாற்றுவதற்காக அலெக்ஸ் பாண்டியனை சிறையில் அடைத்ததாகவும் முழக்கங்களை எழுப்பினர்.