வைகையில் வெள்ளப்பெருக்கு.. "யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம்" கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
தேனி: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ, இறங்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது.
இதனையடுத்து அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் கடந்த 2வாரங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில் தண்ணீர் திறப்பதும் நிறுத்தப்பட்டது.
அத வேற ஞாபகப்படுத்திட்டீங்க! வைகை அணையில் தெர்மாக்கோல்! காரணம் யாரு தெரியுமா? உடைத்த செல்லூர் ராஜு!
நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை
இந்த நிலையில் வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனையடுத்து வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக படிப்படியாக சரிந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது.
69 அடியை எட்டிய நீர்மட்டம்
71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் இன்று காலை 69 அடியாக எட்டியதை தொடர்ந்து தேனி, மதுரை,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு வினாடிக்கு 2,209 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்படும்.
3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப் பணித்துறை விடுத்துள்ளது. வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப் பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலர் பாய்ந்தோடும் தண்ணீர் முன் செல்ஃபி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுப் பணித்துறை அறிவுறுத்தல்
அதேபோல் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பொதுப் பணித்துறையினா் எச்சரித்துள்ளனா். வைகை அணை நீர்மட்டம் ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்புவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.