பேனரில் சாமி இல்லை.. களேபரமான அறநிலையத்துறை கருத்துகேட்பு கூட்டம்.. சுகிசிவம் பேச்சுக்கு எதிர்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று திருநெல்வேலியில் நடந்தது. அப்போது மேடையில் இந்து கடவுள்களின் படங்கள் எதுவும் இல்லை. இதனால் இந்து கடவுள்களின் போட்டோவை வைக்க வேண்டும் என கூறிய நிலையில் உடனடியாக போட்டோ கொண்டு வரப்பட்டது. மேலும் இதில் எழுத்தாளரும், பேச்சாளருமான சுகிசிவத்தின் பேச்சுக்கு இந்து அமைப்பினர், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் களேபரம் உண்டானது.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் அமைத்த குழு சார்பில் கருத்து கேட்டு கூட்டம் திருநெல்வேலியில் இன்று நடந்தது. இதில் இந்து அமைப்பினர், தமிழ் அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், சிவனடியார்கள் குவிந்தனர். இதில் தமிழ் ஆர்வலரும், எழுத்தாளும், பேச்சாளருமான சுகிசிவமும் பங்கேற்று இருந்தனர்.

சாமி போட்டோ இல்லை என பிரச்சனை
இந்நிலையில் தான் கூட்டம் துவங்கியது முதலே சலசலப்பு ஏற்பட்டது. அதாவது கருத்து கேட்பு கூட்டம் தொடர்பாக அங்கு மேடையில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனரில் இந்து கடவுள்களின் படம் எதுவும் இடம்பெறவில்லை. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பினரும் கோஷமிட தொடங்கினர்.

உடனே வைக்கப்பட்ட போட்டோ
அப்போது ஒருவர் மேடையில் பேசும்போது, ‛‛இந்து சமய அறநிலையத்துறையின் நிகழ்ச்சியின் பேனரில் ஒரு சாமி படம் கூட இல்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஏன் இந்து சமய அறநிலையத்துறை என பெயர் வைத்துள்ளீர்கள்'' என ஆக்ரோஷமாக பேசினார். இதையடுத்து உடனடியாக சாமி படம் கொண்டு வந்து பேனர் அருகே வைக்கப்பட்டது.

சுகி சிவத்துக்கு எதிர்ப்பு
இருப்பினும் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இரு குழுவாக பிரிந்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மேடையில் தமிழறிஞர் சுகிசிவம் பேசினார். அப்போது, ‛‛தமிழில் பாடல்கள் வைப்பது தொடர்பான கருத்துகளை தெரிவிக்கலாம்'' என்றார். இதற்கு இந்து அமைப்பினர், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு கருத்து கேட்பு கூட்டத்தில் வழங்கப்பட்ட படிவங்கள் சரியில்லை எனக்கூறி கிழித்து எறிந்தனர்.

பாதியில் நிறுத்தம்
இதையடுத்து இந்து அமைப்பினர், பாஜகவினருக்கு எதிராக தமிழ் தேசிய அமைப்புகள், நாம் தமிழர் கட்சியினர் கோஷமிட்டனர் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் கருத்துகளை கடிதம் மூலம் தெரிவிக்கும்படி கூறி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்தவர்களை போலீசார் அப்புறப்பட்டுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரப்பபை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications