கேரளாவில் சர்வ வல்லமை கொண்ட.. தலைவராக உருவெடுக்கும் பினராயி விஜயன்.. முதல்வர் வசம் மட்டும் 28துறைகள்
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிகபட்சமாக 28 துறைகளைத் தன்வசம் வைத்துள்ளார்; மேலும், அனைத்து அமைச்சர்களும் முக்கிய முடிவுகளை முதல்வர் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து கொள்கை முடிவுகளையும் எடுப்பவராக பிரனாயி விஜயன் உருவெடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மே 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதேநேரம் கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியே ஆட்சியைத் தக்க வைத்தது.
கேரள தேர்தல்
கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி 99 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி தக்க வைத்தது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.. இந்த முறை கேரளாவில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய பாஜக, கைவசம் இருந்த ஒரு இடத்தையும் இழந்தது.
பதவியேற்பு விழா
இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாகி 18 நாட்களுக்குப் பிறகு, கேரள முதல்வராக பினராயி விஜயன் நேற்று முன்தினம் பதவியேற்றார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பதவியேற்பு மிக விழா எளிமையாக நடைபெற்றது. 140 சட்டமன்ற உறுப்பினர்கள், 20 எம்பிக்கள் உள்ளிட்ட 500 பேருக்கு மட்டுமே இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழக அரச சார்பில் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்,
21 அமைச்சர்கள்
பினராயி விஜயனுடன் 21 அமைச்சர்களும் பதவியேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, கடந்த முறை அமைச்சராக இருந்த யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 21 அமைச்சர்களுமே புதியவர்கள். குறிப்பாகக் கேரளாவில் கொரோனா பரவலை மிகச் சிறப்பாகக் கையாண்டதாகப் பலராலும் பாராட்டப்பட்ட சைலஜா டீச்சருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக வீணா ஜார்ஜுக்கு சுகாதார துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சைலஜா டீச்சர்
சைலஜா டீச்சருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாதது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்ததுள்ளது. எழுத்தாளர்கள், சினிமா கலைஞர்கள் எனப் பலரும் சைலஜா டீச்சரை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், ஒருவருக்கு இரண்டு முறை அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என்பது கட்சி எடுத்த முடிவு என்று முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளித்திருந்தார். அப்படியிருந்தால் பினராயி விஜயனுக்கு மட்டும் எப்படித் தொடர்ந்து 2ஆவது முறையாக முதல்வர் பதவி அளிக்கலாம் என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன.
துறைகள் ஒதுக்கீடு
இந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போதுதான் மெல்ல ஓய்ந்து வரும் நிலையில், கேரளாவில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்களின் துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது. பினராயி விஜயனின் மருமகனும், முதல்முறையாக எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது ரியாஸுக்கு பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டது.
28 துறைகள்
அதேநேரம் முதல்வர் பினராயி விஜயன் உள்துறை, லஞ்ச ஒழிப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 28 முக்கியத் துறைகளைத் தன்வசம் வைத்துக்கொண்டுள்ளார். கடந்த 2016இல் முதல்வர் வசம் 24 துறைகள் இருந்த நிலையில், தற்போது அது 28ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் முக்கியமான அனைத்து கொள்கை முடிவுகளையும் எடுப்பவராக பிரனாயி விஜயன் உருவெடுத்துள்ளார்.
அறிவுறுத்தல்
மேலும், அனைத்து 21 அமைச்சர்களும் தாங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளை முதல்வர் பிரனாயி விஜயன் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 26 முக்கிய விவகாரங்களைப் பட்டியலிட்டு, அவை தொடர்பான கோப்புகளில், முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமர்சனம்
இதன் மூலம் கேரளாவில் அதிக அதிகாரங்களைக் கொண்ட முதல்வராக பினராயி விஜயன் உருவெடுத்துள்ளார். ஆனால், அதிகார குவியல் என்றும் ஆபத்தானது என்றும் இடதுசாரி தலைவரே இப்படிச் செய்வது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணமாக இருந்துவிடும் என்ற விமர்சனங்களும் ஒருபுறம் எழுந்துள்ளது.