விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு.. தமிழக அரசுப் பேருந்து நடு வழியில் ஜப்தி
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்து வழக்கு ஒன்றில் உரிய இழப்பீடு வழங்காத அரசு விரைவுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.
Recommended Video
ஜப்தி செய்யப்பட்ட பேருந்து நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி இரவு அதிகத்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் குட்டியப்பன் என்பவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
நெல்லை பள்ளி விபத்து: உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம்–முதல்வர் ஸ்டாலின்
அரசுப் பேருந்து மோதியதில் பலி
திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரை சேர்ந்தவர் குட்டியப்பன் இவருக்கு வயது 50. இவருடைய மனைவி லட்சுமி பிரியா. 2016ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பணி நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 10 மணி அளவில் ஆயில் மில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியே சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. சாலையோரத்தில் சென்ற பேருந்து குட்டியப்பன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் குட்டியப்பன் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மறுநாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இழப்பீடு தர கோர்ட் ஆணை
விபத்து தொடர்பாக குட்டியப்பனின் மனைவி லட்சுமி பிரியா போலீசில் புகார் அளித்தார். லட்சுமி பிரியா புகாரில் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து 2019ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றம் குட்டியப்பனின் குடும்பத்திற்கு 16 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது. மேலும் இழப்பீட்டு தொகையை உரிய காலத்தில் வழங்கவில்லை என்றால் 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி ஏ.எம்.ரவி தீர்ப்பு வழங்கி இருந்தார்.
இழப்பீடு தரவில்லை
ஆனாலும் அரசுப் போக்குவரத்து கழக நிர்வாகம் குட்டியப்பனின் மனைவி லட்சுமி பிரியாவுக்கு இழப்பிடு வழங்கவில்லை. இதை அடுத்து லட்சுமி பிரியாவின் சார்பில் வழக்கறிஞர் அன்பழகன் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.22,50,545 வழங்க வேண்டும் என நீதிபதி ரவி உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்றத்தில் மேல்முறையீட்டின் தீர்ப்பையும் அரசுப் போக்குவரத்து கழகம் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
கோர்ட் ஆணையால் ஜப்தி
இதையடுத்து வழக்கறிஞர் அன்பழகன் மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து சென்னை திருப்பதி அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியர்கள் சென்னையிலிருந்து திருப்பதி நோக்கிச் சென்ற தடம் எண் 201 என்ற அரசுப் பேருந்தை நிறுத்தி அந்த பேருந்தை ஜப்தி செய்வதற்கான நோட்டீசை ஒட்டினர். பின்னர் பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பேருந்து நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிகழ்வின்போது வழக்கறிஞர் அன்பழகன், குட்டியப்பன் என்பவருடைய மனைவி லட்சுமி பிரியா ஆகியோர் இருந்தனர்.