தண்ணீர் கலந்த பெட்ரோல் ஊற்றி மோசடி.. பழுதான வாகனங்கள்.. திருவள்ளூரில் பரபரப்பு சம்பவம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்வதாக கூறி வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து அந்த பங்க்கில் பெட்ரோல் விற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
Recommended Video
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்வதாகக் கூறி வாகன ஓட்டிகள் போராட்டம் செய்தனர்.
Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?
தண்ணீர் கலந்த பெட்ரோல் ஊற்றியதால் வாகனங்கள் பழுதாகிவிட்டதாகவும் அதற்கும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என கேட்டு முற்றுகையிட்டனர்.
பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்?
திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் அருகே உள்ளது ஆயில் மில் பகுதி. இங்கு இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் நிலையம் இயங்கி வருகிறது. நேற்று வழக்கம்போல் வாகன ஓட்டிகள் இந்த நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் பிஞ்சிவாக்கத்தை சேர்ந்த சங்கர் என்பவர் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு சென்ற சிறிது நேரத்தில் அவரது இருசக்கர வாகனம் நின்றுவிட்டது. உடனடியாக அருகில் இருந்த மெக்கானிக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது வாகனத்தை ஆய்வு செய்த மெக்கானிக் ஒருவர் பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதால்தான் வாகனம் நின்றுவிட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் வாகனத்தை தள்ளிக்கொண்டு நேராக எச்.பி. பெட்ரோல் பங்கிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் லாரியில் இருந்து நிரப்பப்பட்ட பெட்ரோலைத்தான் விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர்.
வாகன ஓட்டிகள் வாக்குவாதம்
பெட்ரோல் பங்க்கில் சங்கர் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து வாகன ஓட்டிகள் வந்து வாக்குவாதம் செய்தனர். தங்களுடைய வாகனங்களும் பெட்ரோல் நிரப்பிய சிறிது நேரத்தில் நின்றுவிட்டதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த வாகன ஓட்டிகள் முன்னிலையில் ஒரு காலி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பப்பட்டது. அதில் தண்ணீர் கலந்து வருவதை பார்த்து பெட்ரோல் பங்க் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் இதுகுறித்து லாரி ஓட்டுநர்களிடம்தான் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மாற்று பெட்ரோல் தருவதாக உறுதி
எனினும் பெட்ரோலுக்கு வாங்கிய பணத்தை திருப்பித் தந்துவிடுவதாக கூறினர். அது மட்டுமின்றி வேறு ஒரு பெட்ரோல் டேங்க்கில் இருந்து எடுத்து இலவசமாக பெட்ரோல் நிரப்புவதாகவும் கூறினர். ஆனால் இந்த சமாதானத்தை வாகன ஓட்டிகள் ஏற்கவில்லை. தண்ணீர் கலந்த பெட்ரோல் ஊற்றியதால் வாகனங்களுக்கு ஏற்பட் பழுதிற்கு யார் பணம் தருவது என மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட திருவள்ளூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வாகன ஓட்டிகளிடமும், பெட்ரோல் பங்க் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
பெட்ரோல் விற்கக் கூடாது
பெட்ரோலில் தண்ணீர் கலந்து வருவதை கிட்டத்தட்ட உறுதி செய்த போலிசார் தற்காலிகமாக பெட்ரோல் விற்பனை செய்யவேண்டாம் என உத்தரவிட்டனர். மேலும் தண்ணீர் கலப்படம் உள்ள பெட்ரோல் டேங்க்கை முழுமையாக சுத்தம் செய்துவிட்டு, சுத்தமான பெட்ரோலை நிரப்பிய பிறகே விற்பனை செய்யவேண்டும் என போலீசார் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர். தண்ணீர் கலந்த பெட்ரோல் ஊற்றியதால் வாகனம் பழுதானது மட்டுமின்றி தங்களுடைய வேலைகள் பாதிக்கப்பட்டு ஒரு நாள் கூலியை இழந்துவிட்டதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர்.