முகப்பருவை ஊசியால் குத்தியதால் மாணவர் பலி! பழங்குடியினருக்காக போராடிய ஆசிரியை மகாலட்சுமி மீது புகார்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவரின் முகத்தில் இருந்த முகப்பருவை ஊசி மூலம் ஆசிரியை நீக்கியதால் அந்த மாணவன் உயிரிழந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட ஜவ்வாது மலை தொகுதியில் நம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செவத்தான். இவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
இவரது மகன் சிவகாசி (15). இவர் ஜமுனாமரத்தூர் வட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ஜமுனாமரத்தூர் காவல் நிலையம்
இதுகுறித்து ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் செவத்தான் புகார் அளித்தார். அதில் "கடந்த மாதம் 28ஆம் தேதி ஆசிரியை மகாலட்சுமி எங்களை தொடர்பு கொண்டு சிவகாசிக்கு உடல்நிலை சரியில்லை என்றார். உடனே பள்ளிக்குச் சென்று பார்த்த போது மகனின் முகம் வீங்கியிருந்தது. அப்போது எனது மகனிடம் என்னாச்சு ஏன் முகம் வீங்கியிருக்கிறது என கேட்டேன்.
முகத்தில் இருந்த முகப்பரு
அதற்கு என் மகன் என் முகத்தில் இருந்த முகப்பருவை அகற்றுவதற்காக ஊசியால் ஆசிரியை மகாலட்சுமி குத்தினார். இதன் பிறகுதான் என முகம் வீங்கியது என தெரிவித்தார். இதையடுத்து நம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.
சிவகாசி உயிரிழப்பு
ஆனால் சிவகாசி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆசிரியை மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என செவத்தான் புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகாலட்சுமி
மகாலட்சுமி மலைவாழ் மாணவர்களுக்கு உளவியல் ஊக்கமளித்து கல்வியறிவை மேம்படுத்தி வருவதற்காக அரசு விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் மலைவாழ் மக்களின் நலனுக்காக தனியாளாக அவர்களிடம் பேசி அவர்களுடைய பிள்ளைகளை உண்டு உறைவிட பள்ளியில் சேர்க்க முயற்சிகளை எடுத்து பல மாணவர்களை சேர்த்துள்ளார்.
14 ஆண்டுகள் சேவை
இவர் கடந்த 14 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மலைவாழ் குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு பணிகளை செய்துவருகிறார். மாணவர்களுக்கு கல்வியுடன் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்டவற்றையும் கற்பித்து ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வந்தார். அரசு தனக்கு கொடுக்கும் ஊதியம். தன்னார்வலர்களிடம் திரட்டப்படும் நிதி ஆகியவற்றை கொண்டு மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை பள்ளியில் அவரே ஏற்படுத்தியது பாராட்டப்பட்டது. இவர் ராதிகா நடத்திய கோடீஸ்வரி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கிடைக்கும் வருவாய் மூலம் மலைவாழ் மக்களுக்கு உதவி செய்ய போவதாக தெரிவித்திருந்தார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்
இந்த நிலையில்தான் பள்ளியில் மேம்பாட்டுக்காக தன்னிச்சையாக நிதி திரட்டியது, கொரோனா கால கட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மகாலட்சுமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 6 மணி நேரத்தில் மகாலட்சுமியின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.