பசியால் துடிக்கும் குழந்தைகள்.. சிரமப்படும் முதியவர்கள்.. உருக்குலைந்த முத்துப்பேட்டை! #savemuthupet
முத்துப்பேட்டை, திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நிவாரணப் பணிகளின் வெளிச்சத்தில் சிக்காமல் இன்னும் தொடர்ந்து தவித்துக் கொண்டிருக்கிறது.
ஊரே சின்னாபின்னமாகிப் போய்க் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் கஜா புயலின் கோர தாண்டவத்தின் சுவடுகள் நீங்காத வடுக்களாய் காட்சி தருகின்றன.
குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காத நிலை. முதியவர்களின் நிலையைச் சொல்லி மாளாது. கிட்டத்தட்ட ஊரே சின்னாபின்னமாகிப் போய்க் கிடக்கிறது.
[குடிநீர், உணவு, மின்சாரம் இல்லை.. முடங்கியது மன்னார்குடி.. போராட்டத்தில் குதித்த மக்கள்! ]
ஒரு மரம் பாக்கி இல்லை
ஒரு மரம் கூட பாக்கி இல்லாமல் கிட்டத்தட்ட அத்தனை மரங்களும் வீழ்ந்து கிடக்கின்றன. நீண்ட காலமாக நின்றுயுர்ந்து பலன் கொடுத்த ஒரு மரம் கூட இன்று இல்லை. அத்தனையும் வீழ்ந்து கிடக்கின்றன.
மின்சாரம் இன்னும் வரவில்லை
இன்னும் முக்கால்வாசிப் பகுதிகளுக்கு மின்சாரம் இல்லை. மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் மிகப் பெரிய தொய்வு காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் மின்சாரம் மீண்டும் எப்போது வரும் என்றே தெரியவில்லை. பல மின்மாற்றிகள் சேதமடைந்து விழுந்து கிடக்கின்றன.
போர் நடந்த பகுதி போல
ஒரு போர் நடந்த பகுதிக்குப் போய்ப் பார்த்தால் எப்படி இருக்குமோ, அப்படி காணப்படுகிறது முத்துப்பேட்டை. எங்கு திரும்பினாலும் சீர்குலைந்து போய்க் கிடக்கிறது ஊரே.
அப்புறப்படுத்த ஆள் இல்லை
ஊரின் முக்கால்வாசிப் பகுதிகளில் மரங்களும், இன்னும்பிற இடிபாடுகளும் மலை போல் குவிந்து கிடக்கின்றன. அதை அப்புறப்படுத்த போதிய ஆட்கள் இல்லை. இதனால் அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசி பல்வேறு நோய்கள் பரவும் அவல நிலை காணப்படுகிறது.
நிவாரணம் தேவை
குழந்தைகள், முதியவர்களின் நிலைதான் மிகவும் மோசமாக இருக்கிறது. அரசாங்கமும், பிற நிவாரணப் பணியாளர்களும் தங்களது கவனத்தை இந்தப் பக்கம் தீவிரமாக திருப்பி விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தகவல், படங்கள் உதவி: தெளசீப் அகமது, முத்துப்பேட்டை.