திருப்பூர் மசூதி விவகாரம்.. ”உரிமையை விட மாட்டோம்” - வக்ப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் உறுதி
திருப்பூர்: நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பள்ளிவாசலுக்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்ததை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், பள்ளிவாசலை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் சட்டப்படி அதை மீட்டெடுப்போம் எனவும் வக்ப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், "சென்ற 30/06/2022 வியாழன் அன்று காலை காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் வருகை. மஸ்ஜிதைச் சுற்றி போலிஸ் பட்டாளம். எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்த பொதுமக்கள்.
பதற்றம் படர்கிறது. கைது நடவடிக்கைத் தொடர்கிறது. 'எங்களின் உயிர் முக்கியமல்ல; எங்கள் பள்ளிவாசலைக் காப்போம்' என்கிற பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
கோர்ட் உத்தரவு.. திருப்பூரில் மசூதிக்கு ”சீல்” வைக்க சென்ற அதிகாரிகள்.. இஸ்லாமியர்கள் போராட்டம்
போராட்டம்
பெண்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகிவரும் செய்தி காட்டுத்தீபோல் பரவுகிறது. சாதி சமய வேறுபாடின்றி நீதிக்கும் நியாயத்திற்கும் குரல் கொடுக்கும் ஆண்கள் கூட்டம் அந்த பகுதியையே நிரப்பிவிட்டது. பதற்றம் அதிகரிக்கிறது. தகவல்கள் வரத் தொடங்கியதுமே வக்பு வாரிய கூட்டத்தை அப்படியே ஒத்திவைத்துவிட்டு, மாண்புமிகு வாரிய உறுப்பினர்களுடன் வழக்கறிஞர்களின் குழுவையும் கலந்து பேசிவிட்டு, அரசு தலைமைச் செயலகம் விரைந்தோம்.
தற்காலிக தீர்ப்பு
அரசு தலைமைச் செயலர் இறையன்பு அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்குள் சென்றோம். அவசர வழக்காக இந்த பிரச்சினையை இன்றே எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்ற அனுமதியைப் பெற்றார் நமது வழக்கறிஞர் குழு தலைவர் ஹாஜா முகைதீன் ஜிஸ்தி. அனுமதி வழங்கப்பட்ட மாலை 4:30 மணி எப்போது வரும் என்று நாங்கள் வாரிய உறுப்பினர்கள் எல்லோருமே காத்துக்கிடந்தோம். நல்ல செய்தி வந்தது. 'வருகிற திங்கட்கிழமை வரை அவகாசம்' என்கிற அறிவிப்பு கிடைத்தது. தற்காலிக நிம்மதி.
திருப்பூரில் ஆலோசனை
மஸ்ஜிதைச் சூழ்ந்து இருந்த பதற்றம் தணிந்து காவல்துறையும், மக்கள் திரளும் கலையத் தொடங்கின. மக்களிடத்தில் நல்ல புரிதலையும், இனி ஆற்றவேண்டிய பணிகளையும் எடுத்துரைத்து, அமைதியை நிலைநாட்டிட மறுநாளே திருப்பூர் புறப்பட்டேன். ஜூம்ஆ தொழுகையை அதே மஸ்ஜிதில் நிறைவேற்றிவிட்டு அனைவருக்குமான சில தகவல்களைத் தந்துவிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், மாமன்ற ஆணையர் ஆகியோருடன் சந்திப்பு.
வழக்கறிஞர்களுடன் ஆலோசனை
மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் உடன் இருந்தார். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடனும், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர் சுப்பிரமணி உடனும் தொலைபேசி மூலம் விளக்கமாக இதுபற்றிய செய்திகளை மனம்திறந்து பேசினோம். எல்லாம் முடித்து நேற்றே சென்னை திரும்பினேன். இன்று நமது வழக்கறிஞர் குழுவுடன் தீவிர கலந்துரையாடல் தொடர்கிறது. திங்கட்கிழமை நீதிமன்றத்தை எதிர்கொள்ளவேண்டும். தமிழ்நாடு அரசின் பாரபட்சமற்ற சிறந்த நிர்வாகம் நல்ல தீர்வுக்கு உரிய வழிகாட்டுதலைத் தரும்.
விட்டுக்கொடுக்க மாட்டோம்
எது எப்படியோ, ஒன்றில் மட்டும் சமரசமே இல்லை, விட்டுக்கொடுக்கவே மாட்டோம். "நமது உரிமையைத் தாரைவார்க்க முடியாது. நமது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை. எது வந்தாலும், எப்படி வந்தாலும் சந்திக்கத் தயார். வரம்பு மீறமாட்டோம்; சட்டத்தை மதிப்போம்; அநீதியையும் அக்கிரமத்தையும் துணிந்து எதிர்ப்போம்; நல்லெண்ணம் கொண்ட அனைத்து சமூக மக்களுடனேயே பயணிப்போம். நமது இலக்கு நன்முறை சார்ந்த வெற்றி; வன்முறை அற்ற அழகிய அணுகுமுறை." என்றார்.