"தில்லு" இருந்தால், "திராணி" இருந்தால்.. திருச்சியில் சூடான எடப்பாடி.. திமுகவிற்கு விடுத்த சவால்!
திருச்சி : கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியாத கட்சி திமுக எனவும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறது என்றால் அவர்களுக்கு எதற்கு கட்சி என முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி சுப்பிரமணியபுரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி," திருச்சி மாநகரம் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற இரவு பகலாக உழைக்க வேண்டும். ஸ்டாலின் நம் தொண்டர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு வருகிறார், இதற்கு எல்லாம் பயந்தவர்கள் நாங்கள் அல்ல. கருணாநிதி முதல்வராக இருந்த போது சட்டசபைக்குள் ஜெயலலிதாவை தாக்கினார்கள். நான் இனி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தான் சட்டசபைக்கு உள்ளே நுழைவேன் என்று ஜெயலலிதா சபதம் செய்தார். அதே போல் முதல்வராக பதவி ஏற்றார். எம்ஜிஆரும் திமுகவினரால் மைக் ஆப் செய்யப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டார். சவால் விட்டு முதல்வரானார் எம்ஜிஆர். அந்த இரு பெரும் தலைவர்கள் செய்த சாதனைகளை நாங்கள் எடுத்து கூறி வருகிறோம், நீங்களும் செய்ததை கூறுங்கள் அதை விட்டு விட்டு மிரட்டுவது,பொய் வழக்குகளை போட்டு வருகின்றார்கள் என்றார்.

மக்களிடம் தப்பிக்க முடியாது
மக்கள் 9 மாதத்திலேயே அதிருப்பதியில் உள்ளனர், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை,மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். கூட்டணி இல்லாமல் நிற்க திராணி இல்லாத கட்சி திமுக - தில்லு இருந்தால் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகள் இல்லாமல் நின்று பாருங்கள். மக்கள் இடத்தில் இருந்து அவர்கள் கேட்க வேண்டியதை நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து கேட்கிறோம். கொட நாட்டில் கொலை,கொள்ளை நடந்ததை கண்டு பிடித்ததே அதிமுக தான். பொய் பேசி தப்பிக்க முடியாது ஸ்டாலின் அவர்களே, குற்றவாளிகளுக்கு என்றும் நாங்கள் துனை போக மாட்டோம்,காவல் துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக இருந்தார்கள் இப்போது ஏவல் துறையாக மாறி உள்ளது.

காவல்துறைக்கு மாதிப்பு
அதிமுக ஆட்சியில் காவல்துறையினருக்கு மதிப்பு இருந்தது, காவல்துறையினர் நடுநிலையோடு இருங்கள்,தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் காவல் துறையை வைத்து கொண்டு வழக்கு போடுவது,பிரச்சினை செய்வது என ஈடுபட்டு வருகிறார்கள் திமுகவினர். படித்தவர்களை கூட ஏமாற்றிய கட்சி திமுக, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவோம்,ஆனால் திமுக ஆட்சியில் வழங்கப்படமாட்டாது, - அரசு ஊழியர்களுக்கு உரிய மரியாதையை அதிமுக தான் கொடுத்து வந்தது. பெட்ரோலுக்கு 3 ரூபாய் குறைத்து டீசல் குறைக்கவில்லை,மத்திய அரசியல் பெட்ரோல் டீசல் விலையை குறைத்த பின்னர் இந்தியாவில் 25 மாநில முதலமைச்சர்கள் பெட்ரோல் டீசல் விலையைக்
குறைத்துள்ளனர்,ஆனால் திமுக குறைக்கவில்லை.

நீட் எனும் நச்சு விதை
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் நீட் என்ற நச்சு விதை கொண்டு வரப்பட்டது - மறு சீராய்வு மனு போட வேண்டாம் என்று ஜெயலலிதா கூறினார்,ஆனால் அதை கேட்காது திமுக,காங்கிரஸ் மனுவை போட்டார்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பு நகல் என் கையில் உள்ளது - ஆதாரத்துடன் நான் பேசுகிறேன் - எனவே கொஞ்சம் நஞ்சம் நன் மதிப்பையும் திமுக இழக்க வேண்டாம். 7.5 % உள் இட ஒதுக்கீடு மருத்துவ கல்வியில் கொண்டு வந்து அவர்களுக்கு மருத்துவ கல்வி கட்டணமும் இல்லை என்றது அதிமுக தான். திருச்சி மாநகராட்சி மேயர் அதிமுகவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் - அதற்கு நமக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் நாம் மறக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தீய சக்தியை நாம் அழிக்க முடியும்." என எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications