திருச்சியில் ஒரு எம்எல்ஏ தொகுதி.. காய் நகர்த்தும் துரை வைகோ.. தலையசைக்க மறுக்கும் நேரு, அன்பில்!
திருச்சி: திருச்சியில் உள்ள 9 சட்டசபைத் தொகுதியில் ஒன்றை மதிமுகவுக்கு பெற்றிட வேண்டும் என்பதில் அக்கட்சியின் எம்பி துரை வைகோ தீவிரமாக இருக்கிறார். ஆனால் திருச்சியில் உள்ள 9 தொகுதிகளையும் திமுகவுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் பிடிவாதம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குவதில் தீவிரமாக இருக்கின்றனர்.

அதேபோல் தங்களுக்கு சாதகமான தொகுதிகளையும் அடையாளம் கண்டு பட்டியலுடன் காத்திருக்கின்றனர். பொங்கல் முடிவடைந்து தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி எம்பி-யாக துரை வைகோ இருந்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலின் போது தீப்பட்டி சின்னத்தில் போட்டியிட்ட துரை வைகோ, நேருவின் செயலால் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
இதையடுத்து திருச்சியில் துரை வைகோ மற்றும் திமுக நிர்வாகிகள் மத்தியில் பெரியளவில் நட்பு இருக்கவில்லை. டெல்லியில் தனது எம்பி தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் துரை வைகோ தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் திருச்சியில் மதிமுகவை வளர்க்கவும் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் மதிமுகவின் முக்கிய நிர்வாகியான மருத்துவர் ரோஹைய்யா ஷேக் முகமதுவுக்கு திருச்சியில் ஒரு தொகுதியை பெற்றுக் கொடுத்திட வேண்டும் என்பதில் துரை வைகோ தீவிரமாக இருக்கிறார். அதற்கேற்ப மதிமுக தலைமையும் ஓகே சொல்லிவிட்ட சூழலில், திருச்சியின் தனது தேர்தல் பணிகளையும் ரோஹைய்யா ஷேக் முகமது தொடங்கி இருக்கிறார்.
ஆனால் இந்த விவகாரம் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் காதுகளுக்கு சென்றுள்ளது. ஏற்கனவே திருச்சியில் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இடையில் மறைமுக மோதல் இருந்து வருகிறது. திருச்சியில் தனது ஆதரவாளர்களை அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவருமே தீவிரமாக இருக்கின்றனர்.
இதனால் திருச்சியில் உள்ள 9 சட்டசபைத் தொகுதிகளையும் திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என்று இரு தரப்பில் திமுக தலைமையிடம் தெளிவாக கூறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் துரை வைகோவின் திட்டம் பலிக்குமா என்பதை இன்னும் சில மாதங்களில் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications