ராமஜெயத்தை கொன்றது யார்? எதற்காக?..சிக்குவாரா சூத்திரதாரி.. 20 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை
திருச்சி : ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று உண்மை கண்டறியும் சோதனை திருச்சியில் நடைபெற உள்ளது. உண்மை கண்டறியும் சோதனைக்காக 20 சந்தேக நபர்கள் டிஜிபி ஷகில் அக்தர் முன்பு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த, 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பரபரப்பாக தேடி வந்த நிலையில் அவரது உடல் கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டு காலமாக கொலையாளிகள் யார் என்று நெருங்கவே முடியவில்லை. தமிழக காவல்துறை, சிபிசிஐடி, சிபிஐ என மாறி மாறி விசாரித்து ராமஜெயம் கொலைக்கான காரணம் என்ன என்ற தகவலைக்கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராமஜெயம் கொடூர கொலை
2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொடூரமாக கொல்லப்பட்டார் பல கட்ட விசாரணைக்கு பிறகு வழக்கு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சிபிஐ வசம் சென்றது. போலீசார் மேற்கொண்ட விசாரணையிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இந்த கொலை வழக்கை தமிழக போலீசாரிடமே மீண்டும் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி வி. பாரதிதாசன் விசாரித்தார். அப்போது தமிழக போலீஸ் விசாரணைக்கு மீண்டும் மாற்ற முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கலாம். அதில் தமிழக அதிகாரிகளையும் இடம்பெறச் செய்யலாம் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ கருத்து தெரிவித்தார். இதற்கு தமிழக அரசு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு புலனாய்வுக்குழு
இதனையடுத்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி, கடந்த 10 ஆண்டுகள் ஆகியும் ராமஜெயம் ஏன் கொலை செய்யப்பட்டார்? கொலைக்கான நோக்கம் என்ன என்பதை கூட போலீஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கிறேன். அதில், ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள், தமிழக போலீசார் இடம்பெற வேண்டும். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. போலீஸ் அதிகாரி ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கிறேன்.

சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்
இந்த குழுவின் விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் மேற்பார்வை செய்ய வேண்டும். இந்த குழுவின் ஒட்டுமொத்த புலன் விசாரணையையும் இந்த உயர்நீதிமன்றம் கண்காணிக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை விசாரணையின் விவரங்களை அறிக்கையாக இந்த சிறப்பு குழு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

விசாரணை விறுவிறுப்பு
ராமஜெயத்தின் நெருங்கிய உறவினர்கள், திருச்சி, புதுக்கோட்டையில் உள்ள ரவுடிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வெகுமதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது.

சந்தேக லிஸ்ட்
இதையடுத்து சுங்கச்சாவடிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் குறிப்பிட்ட நேரத்தில் சென்ற வாகனங்களை ஆய்வு செய்ய போலீசார் கோவை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சந்தேக்கப்படும் நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை அறிக்கை
சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தங்கள் விசாரணை அறிக்கையை இரண்டு முறை தாக்கல் செய்து மேலும் இந்த வழக்கில் அவகாசம் வேண்டும் என்று கோரியிருந்தனர். அது வழங்கப்பட்டிருந்த நிலையில் தங்கள் விசாரணையை தொடர்ந்த சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் இரண்டு பேரை போலீஸார் தங்கள் இறுதி கட்ட விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சிக்கிய இருவர்
திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேசன், புதுக்கோட்டை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் சென்னையைச் சேர்ந்த எம்எல்ஏ பாலன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்ற நிலையில் ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

சூத்திரதாரி யார்
இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கில் இன்று உண்மை கண்டறியும் சோதனை திருச்சியில் நடைபெற உள்ளது. 20 சந்தேக நபர்கள் டிஜிபி ஷகில் அக்தர் முன்பு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் கொலைக்கான சூத்திரதாரி சிக்குவாரா? ராமஜெயத்தை கொலை செய்தது ஏன் என்ற காரணம் தெரியவருமா என்ற எதிர்பார்ப்பு திருச்சி மக்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications