"இதுதான் கர்மாவோ".. பயங்கர ரவுடிக்கு சாவு மணி அடித்த பலூன் 'கேஸ்'.. திருச்சியில் பரபர சம்பவம்
திருச்சி: திருச்சியில் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்த பயங்கர ரவுடி 'மாட்டு' ரவி என்பவர் பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நாம் விதைத்ததை தான் அறுவடை செய்வோம்' என்ற பழமொழி உண்டு. இது உணவுப் பயிரை குறிப்பிட்டு சொல்லப்பட்டது அல்ல. மாறாக, நாம் செய்யும் நன்மை - தீமைகளை மட்டுமே நாம் திரும்பப் பெறுவோம் என்பதை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழி ஆகும்.
இதை பல வழிகளில் நாமும் உணர்ந்திருப்போம். பலரது வாழ்க்கையை பார்த்தும் தெரிந்திருப்போம். உதாரணமாக, பல தீய செயல்களில் ஈடுபட்டு, கொலை பாதகங்களை செய்யும் ஏராளமான ரவுடிகளின் முடிவும் அதுபோலவே கோரமாக இருக்கும். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் திருச்சியில் நடைபெற்றுள்ளது.
ராஜராஜ சோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள், காட்டுமிராண்டுயா இருப்பாங்க.. பாஜக கடும் விமர்சனம்
அலைமோதிய மக்கள் கூட்டம்
திருச்சி சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மெயின் கார்ட் கேட் பகுதி உள்ளது. இங்கு பல பிரபலமான துணிக்கடைகளும், வணிக வளாகங்களும் இருப்பதால் காலை முதல் இரவு வரை இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதனிடையே, நேற்று விடுமுறை என்பதாலும், ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகைகள் நெருங்கிக் கொண்டு இருப்பதாலும் அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கிருக்கும் துணிக்கடைகளிலும் ஏராளமான மக்கள் இருந்தனர்.
மாமூலுக்கு பேர் போன 'மாட்டு' ரவி
இந்நிலையில், அந்த துணிக்கடைகளுக்கு முன்பு ஏராளமான சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். தின்பண்டங்கள், பலூன்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள் ஆகியவற்றை விற்கும் சிறிய சிறிய கடைகள் அங்கு இருந்தன. அப்போது அங்கு வந்த பிரபல ரவுடியான ரவி (எ) 'மாட்டு' ரவி, அங்கிருந்த வியாபாரிகளிடம் அடித்து மிரட்டி மாமூல் வசூலித்துக் கொண்டிருந்தார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டால், 'மாட்டு' ரவி அங்கு வந்து வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பாராம்.
பலூன் கடையில் மாமூல் கேட்டு மிரட்டல்
மாமூல் கொடுக்காத வியாபாரிகளை கண்மூடித்தனமாக அவர் தாக்குவார் எனக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பயந்துகொண்டு சிறு வியாபாரிகள் அவருக்கு வாரந்தோறும் மாமூல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் அங்குள்ள 'சென்னை சில்க்ஸ்' துணிக்கடை முன்பு கடை போட்டுள்ள வியாபாரிகளிடம் ரவுடி 'மாட்டு' ரவி மாமூல் வசூலித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பலூன் விற்றுக் கொண்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனார் சிங்கிடம் 'மாட்டு' ரவி மாமூல் கேட்டார். அப்போது, "இன்னும் வியாபாரம் சரியாக ஓடவில்லை. சிறிது நேரம் கழித்து வாருங்கள். பணம் தருகிறேன்" என அனார் சிங் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ரவுடி 'மாட்டு' ரவி, அவரை மிரட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
'காஸ்' சிலிண்டர் வெடித்து சிதறியது
இந்நிலையில், ரவி சிகரெட் புகைக்க தீப்பெட்டியை எடுத்து உரசியுள்ளார். அவ்வளவுதான். பலூனுக்கு காஸ் அடைக்க வைத்திருந்த ஹீலியம் சிலிண்டரில் அந்த தீ பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 'மாட்டு' ரவி பலத்த தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அங்கு இருந்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் லேசான காயமடைந்தனர். இந்த வெடி விபத்தில் அங்கிருந்த சில இருசக்கர வாகனங்களும், ஆட்டோ ஒன்றும் முற்றிலும் சேதமடைந்தன. ஹீலியம் காஸ் சிலிண்டர் வெடித்து பிரபல ரவுடி உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.