திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க போராடியவருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் வியாபாரிகள்
திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி, போராடி வந்த வியாபார சங்க நிர்வாகி கோவிந்தராஜூலுவிற்கு கொரோனா உறுதியானது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலுவிற்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
இந்த வகையில் திருச்சியிலும் அதன் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. திருச்சியில் பிரதானமாக விளங்கும் காந்தி மார்க்கெட்டைத் திறக்க வேண்டும் என்று வியாபார சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நிலைமை மோசம்.. சென்னையில் லாக்டவுனை தீவிரமாக்குங்கள்.. முதல்வருக்கு மருத்துவ குழு அதிரடி பரிந்துரை
நிர்வாகிகள்
அந்த வகையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலுவுடன் சேர்ந்து, அதன் நிர்வாகிகள் கடைகளைத் திறக்க வேண்டும் என்று தீவிரமாகப் போராடி வந்தனர். சென்னையில் கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.
மறுப்பு
அதோடு பல கட்ட பேச்சு வார்த்தைகளிலும் மறுப்பை ஆட்சியர் வலியுறுத்தி வந்தார். சில தினங்களுக்கு முன்பு, திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் காந்தி மார்க்கெட் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சளி காய்ச்சல்
மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோவிந்தராஜுலு உள்ளிட்ட இதர சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டம் முடிந்து முதல் வீட்டுக்குத் திரும்பிய கோவிந்தராஜுலு சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
கொரோனா
அதோடு அவர் திருச்சியில் உள்ள உணவக விடுதி அதிபருடன் இணைந்து சென்னை சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கோவிந்தராஜுலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அதிர்ச்சி
திருச்சி காந்தி மார்க்கெட் திறக்கப்பட்டால், கொரோனா பரவும் என்று மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், அதற்காகப் போராடிய சங்க நிர்வாகிக்கு தொற்று உறுதியாகி இருப்பது வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடன் சென்னை சென்றதாகச் சொல்லப்படும் உணவக விடுதி அதிபரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.