பேரறிவாளன் விடுதலை.. எல்லாம் தெரிந்துதான் திமுக கூட்டணியில் இருக்கிறோம்! காங்கிரஸ் எம்பி பரபர கருத்து
திருச்சி: ‛‛பேரறிவாளனை தமிழர் என்ற அடிப்படையில் விடுதலை செய்தது காங்கிரசுக்கு ஏற்புடையது அல்ல. இது எல்லாம் தெரிந்துதான் திமுக கூட்டணியில் இருக்கிறோம். இந்த கூட்டணி தொடரும்'' என காங்கிரஸ் கட்சியின் எம்பி திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி மக்களவை தொகுதி எம்பியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் உள்ளார். இவர் திருச்சி மணப்பாறையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேரறிவாளன் விடுதலை பற்றியும், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக பயணம் குறித்து திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்தார். இதுபற்றி திருநாவுக்கரசர் கூறியதாவது:
அது மாதிரி எல்லாம் ஆசைப்படாதீங்க! அவ்வளவு சீக்கிரமாக நடக்காது! சமாளித்த திருநாவுக்கரசர்!
தர்மத்துக்கு உட்பட்டது அல்ல
பேரறிவாளனை சட்டத்துக்கு உட்பட்டு அல்லது நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டு விடுதலை செய்து இருக்கலாம். ஆனால் இந்த விடுதலை என்பது தர்மத்தின் வரம்புக்கு உட்பட்டது அல்ல. இதுபோன்று பார்த்தால் நிறைய பேரை விடுதலை செய்ய வேண்டி வரும். வீரப்பன் அண்ணன் 35 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறினார். இதற்கிடையே வீரப்பன் அண்ணன் இறந்துபோய்விட்டார்.
கூட்டணி தொடரும்
இந்தியா முழுவதும் குற்றம் செய்தவர்கள், தீவிரவாதிகள் பல சிறைகளில் 25 முதல் 30 ஆண்டுகள் வரை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய முடியுமா?. தமிழர் என்ற அடிப்படையில் விடுதலை என்பது காங்கிரசுக்கு ஏற்புடையது இல்லை. இறந்துபோன் வீரப்பனின் அண்ணன் கூடத்தான் தமிழர். அவர் ரஷ்யாவை சேர்ந்தவர் இல்லையே. இந்த விஷயம் பற்றி எல்லாம் தெரிந்து தான் கூட்டணியில் இருந்தோம். கூட்டணி தொடரும்.
வராதீங்கனு சொல்ல முடியாது
பிரதமர் மோடியை தமிழ்நாட்டுக்கு வராதீங்க என சொல்ல முடியாது. பிரதமர் என்ற முறையில் அவர் தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம். தற்போது நல்ல திட்டங்களை துவங்கி வைத்துள்ளார். அதோடுநிலுவையில் உள்ள ஜிஎஸ்டி பணம், கொரோனா நிதியையும் வழங்க வேண்டும்.
‛கம் பேக் மோடி’ தான்
இன்னொரு முறை கூட பிரதமர் மோடி தமிழகம் வரலாம். நான் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவனாக இருந்தாலும் கூட கோ பேக் மோடி என சொல்லமாட்டேன். கம் பேக் மோடி என்று தான் சொல்வேன். தமிழகத்துக்கு புதிய திட்டங்களோடு வந்து வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்'' என்றார்.