தூத்துக்குடியில் ஆவேசம் காட்டிய மக்கள்... கனிவு காட்டிய கனிமொழி
தூத்துக்குடி: கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மிதப்பதை அடுத்து கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது ஒரு சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு மக்கள் ஆவேசம் காட்டிய போதும் கூட, தனது பெயருக்கு ஏற்றார் போல அவர்களிடம் கனிவுடன் பேசினார் கனிமொழி.
சாலைகளிலும், தெருக்களிலும் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரி முதல்வர் முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்
தண்ணீர் சூழ்ந்தது
தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால், நகரின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அரசு இயந்திரம் தீவிரம் காட்டிய நிலையிலும் அடுத்தடுத்து பெய்த மழையால் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்ற முடியவில்லை.
தூத்துக்குடி வருகை
தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து கடந்த சனிக்கிழமையன்று திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதா ஜீவன் கனிமொழிக்கு தகவல் தர, அவர் அடுத்த விமானத்தை பிடித்து சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று நேற்றும் நேற்று முன் தினமும் தங்கி சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தார்.
கனிவான பேச்சு
தண்ணீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிடச் சென்ற கனிமொழியிடம், ஒரு சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அனைத்தையும் கனிவுடன் கேட்டுக்கொண்ட கனிமொழி, அதிமுக அரசு மீதுள்ள கோபத்தின் வெளிப்பாடு இது என திமுகவினரிடம் எடுத்துக் கூறினார்.
ஆலோசனை
நேற்றைய தினம் மக்களவைக்கு கூடச் செல்லாமல் தனது தொகுதியான தூத்துக்குடியிலேயே தங்கி சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை தொடர்பு கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார். இந்நிலையில் அவர் மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.