6வது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிப்பு.. நாளை ஜெயிலுக்கு திரும்பவிருந்த நிலையில் தமிழக அரசு உத்தரவு!
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு 6-வது முறையாக பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பரோலில் வந்த நளினிக்கு தொடர்ந்து 6வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நளினிக்கு வரும் ஜூலை 27ஆம் தேதி வரை மேலும் 30 நாட்களுக்கு பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது கணவர் முருகன் ஆண்கள் சிறையில் டைக்கப்பட்டுள்ளார். நளினியும் முருகனும் தங்களை விடுவிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பரோல் விண்ணப்பம்
நளினியின் தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனையடுத்து அவருக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அவரது கணவர் முருகன் மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முருகனுக்கு பரோல் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

நளினி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் உள்ள நளினி தனது தாயார் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். தொடர்ச்சியாக 5 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் பரோல் காலம் நிறைவடைவதால் நாளை சிறைக்குத் திரும்ப இருந்தார்.

பரோல் நீட்டிப்பு
இதற்கிடையே, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நளினியின் தாயார் பத்மா நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நளினிக்கு 6-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 27ஆம் தேதி வரை மேலும் 30 நாட்கள் நளினிக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications