முருகன் விடுதலை.. “அனுமதியின்றி வீடியோ கால்” பேசிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.. அடுத்த மூவ் என்ன?
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகன், அனுமதியின்றி வீடியோ கால் பேசிய வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் இருந்த முருகன், அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அனுமதியின்றி வீடியோ கால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவரை விடுவிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெந்த புண்ணில் வேல்...ராஜீவ் கொலை வழக்கில் எஞ்சிய 6 தமிழரை விடுதலை செய்ய ஜி.கே.வாசன் எதிர்ப்பு
முருகன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் முருகன். இவர் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியின் கணவர் ஆவார்.
சில ஆண்டுகளுக்கு முன், சிறையில் நடத்திய திடீர் சோதனையில் முருகன் அறையில் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதாக, அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதனால் அவருக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.
வீடியோ கால்
கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய சிறையிலிருந்து அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியது தொடர்பாக சிறைத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை வேலூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்தது.
தீர்ப்பு
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், முருகன் வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். மத்திய சிறையில் இருந்து அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முருகனை விடுதலை செய்து வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தது.
விடுதலை
முருகன், அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியது தொடர்பாக அரசு தரப்பிலிருந்து போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் அவரை விடுவிப்பதாக நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், அவர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பார்.
மற்ற 6 பேர்
சமீபத்தில், முருகன் தனக்கு பரோல் வழங்கக் கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் உடல் நலிவுற்று மயக்கமடைந்தார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதற்கிடையே முருகனுக்கு அவர் கோரியபடி பரோல் வழங்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.