தேவர் குரு பூஜைக்கு பிரதமர் மோடி சும்மாவா வர்றாரு.. எல்லாம் 2024ஐ குறி வைத்துதான்.. விசிக பொளேர்
விழுப்புரம்: முக்குலத்தோர் வாக்குகளை பிரதமர் குறி வைக்கிறார் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் தேவர் ஜெயந்தியும் தேவர் குருபூஜையும் நடைபெறும்.
அது போல் இந்த ஆண்டு அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
யாருமே எதிர்பார்க்காத பாஜகவின் அதிரடி-தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி? தேவர் வாக்குகளுக்கு குறி?
பிரதமர் நரேந்திர மோடி
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சாதி ரீதியில் மக்களை பிளவுப்படுத்தி, அரசியல் லாபம் பார்ப்பதற்காகவே பிரதமர் மோடி குரு பூஜை விழாவிற்கு வருகிறார் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக நல்லிணக்க மனித சங்கிலி
விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியில் பங்கேற்ற பின்னர் எம்பி ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நரேந்திர மோடி பிரதமராகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போதுதான் தேவர் குருபூஜைக்கு வர வேண்டும் என அவருக்கு புரிகிறதா.
தேவேந்திர குல வேளாள மக்கள்
தேவேந்திர குல வேளாள மக்களை பட்டியிலிருந்து நீக்கி சட்டம் இயற்றுவதாக கூறி அதனை நிறைவேற்றாமல் முக்குலத்தோர் வாக்குகளை குறி வைத்து தேவர் குரு பூஜையில் மோடி பங்கேற்கவுள்ளார். தென் மாவட்ட மக்கள் பாஜகவை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள் என காட்டமாக தெரிவித்தார். பாஜகவுக்கு தென்மாவட்டங்களில் கணிசமான வாக்குகள் உள்ளன.
தென் மாவட்டங்கள்
எனினும் தென் மாவட்டங்களில் எம்பி தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லவில்லை. அது போல் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் நாகர்கோவிலில் காந்தியும் நெல்லையில் நயினார் நாகேந்திரனும் வென்றனர். வடமாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் செல்வாக்கை அதிகரித்து தேவர்களின் வாக்குகளை பெறவே மோடி இந்தாண்டு தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருகை தருகிறார் என பரவலாக பேசப்படுகிறது.