விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலம்.. மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி.. விருதுநகரில் பரபரப்பு!
விருதுநகர்: ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் நேற்றிரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சொக்கநாதன்புத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள குலாலர் தெருவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் விபத்து ஏற்பட்டது.
பொன்னியின் செல்வன்.. டைமிங்கில் அசத்தல் முடிவு எடுத்த சுற்றுலாத் துறை.. 3 நாள் டூருக்கு ஏற்பாடு
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் விபத்து
குலாலர் தெருவில் அருகே உள்ள வளைவில் திரும்பிய போது மரத்தின் மீது சப்பரம் மோதியதால் விளம்பர பலகை விழுந்தது. இதனால் மின்சாரம் சப்பரத்திலும் பாய, ஊர்வலத்தில் சென்ற சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்த முனீஸ்வரன், மாரிமுத்து, செல்வகிருஷ்ணன், செல்லப்பாண்டி ஆகியோர் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தனர்.
இருவர் உயிரிழப்பு
இவர்கள் 4 பேரும் மீட்கப்பட்டு தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சொல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் விபத்துகள்
கடந்த சில மாதங்களாக அவ்வப்போது கோயில் நிகழ்ச்சிகளில் விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த பிரகதாம்பாள் கோயில் தேர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
வழிகாட்டுதல்
இதனால் கோயில் திருவிழாக்கள், ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளன. அதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டுள்ள உரிய வழிகாட்டுதல்களை கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.