மலைப் பகுதியில் திடீர் தீ விபத்து.. சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் ஏராளமான பக்தர்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க பூமி என அழைக்கப்படுகிறது .மேலும் சதுரகிரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.
இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் ,அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சகரகிரி கோயிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம், மகாளய அமாவாசை முன்னிட்டும், நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும் கடந்த 23 ஆம் தேதி முதல், வரும் 5 ஆம் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் கோயிலில், ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 26-ம் தேதி முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அதன்படி, நாள்தோறும் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்லும் மற்றொரு மலைப்பாதையான சாப்டூர் பகுதியில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக பக்தர்கள் மலையேறிச் செல்ல செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை என்பது அதிகரித்து காணப்படுகிறது அனுமதி மறுக்கப்பட்டதால் அடிவாரப் பகுதியான தாணிபாறை பகுதியில் பக்தர்கள் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அமாவாசை, நவராத்திரி..சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 13 நாட்களுக்கு அனுமதி..குட்நியூஸ் சொன்ன வனத்துறை