மணக்கோலத்தில் கண்ணீருடன் மணப்பெண்! நகை பையுடன் ஓடி வந்த ‘ஆட்டோக்காரர்’.! அந்த மனசு தான் சார் கடவுள்!
விருதுநகர் : விருதுநகரில் ஆட்டோவில் தவறவிட்ட 25 சவரன் திருமண நகையை ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பளர் பாராட்டினார்.
உங்கள மாதிரி ஆள் இருக்குறனாலதான் நாட்டில் அப்பப்போ மழை பெய்யுது என்று எங்கோ, ஏதோ ஒரு இடத்தில், யாரோ ஒருவர் அடிக்கடி சொல்வதை நாம் கேட்டிருப்போம்..
மனிதாபிமானம் இந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கனத்தை சீக்கிரம் மதிப்பிட முடியாது. அந்த வகையில் ஏதோ ஒரு மூலையில் இன்னும் மனிதாபிமானம் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்பதற்கான சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது.
காலை திருமணம்
அந்த வகையில் மனிதாபிமானத்தோடு நேர்மையும் சேர்ந்த ஒரு ஆட்டோக்காரர் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம். விருதுநகர் பெரிய வள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி - முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களது மகளுக்கு விருதுநகர் ராமர் கோவிலில் இன்று காலை திருமணம் நடந்தது. மற்ற வைபவங்கள் அனைத்தும் விருதுநகர் கந்தசாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஆட்டோ ஓட்டுனர் ராமர்
இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் விருதுநகர் ராமர் கோவிலில் இருந்து மண்டபத்திற்குச் செல்ல அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி உள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் ராமர் அவர்களை திருமண மண்டபத்தில் இறக்கி விட்டு ஆர்.எஸ்.ஆர்.நகரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டார்.
நகைகள் மாயம்
இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து மீண்டும் மற்றொரு சவாரிக்காக வீட்டில் இருந்து ராமர் புறப்பட்டுள்ளார். அப்போது ஆட்டோவின் பின் சீட்டில் பேக் ஒன்று இருப்பதைக் கண்ட அவர், பேக்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில், நகைகள் இருப்பது தெரியவந்தது.
ஓட்டுனரின் நேர்மை
இதைத் தொடர்ந்து ராமர் திருமண மண்டபத்திற்குச் சென்றார். அங்கு நகையை தவறவிட்ட கவலையில் பெண்ணின் பெற்றோர்கள் கண்ணீருடன் நின்றிருந்தனர். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் ராமர் அவர்களிடம் நகை இருந்த பேக்கை வழங்கினார். அங்கிருந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் முன்னிலையில் நகைகள் சரிபார்க்கப்பட்டு பெண்ணின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையுடன் நகைப் பையை ஒப்படைத்த ராமருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.