பிரிவும் நிரந்தரம் இல்லை.. விவாகரத்துக்கு பிறகு மலர்ந்தது காதல்.. இணைந்த ஜோடிகள்! சுவாரசிய தகவல்
வாஷிங்டன்: ஆஸ்திரேலியாவில் விவாகரத்து செய்து பிரிந்த தம்பதியினருக்கிடையே தற்போது மீண்டும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கியிருப்பது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உடைந்த கண்ணாடி ஒட்டாது என்பார்கள்.. இது உண்மையான பந்தத்திற்கு பொருந்தாது.
பாசமும் நேசமும் கொண்ட மனம் பிரிந்தாலும் எப்போது வேண்டுமானாலும் இணைந்து விடும். அது இணையும் போது முன்பை விட இறுகப்பற்றிக்கொள்ளும் என்று சொல்வதுண்டு.
விவாகரத்து வழக்கு.. ஆர்ட்டிக்கிள் 142யை உச்சநீதிமன்றம் பயன்படுத்த முடியுமா? செப்., 28ல் விசாரணை
உருக்கமான ஒரு சம்பவம்
இதை மெய்பிக்கும் வகையில் தான் ஆஸ்திரேலியாவில் ஒரு தம்பதிகளுக்கு இடையே உருக்கமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம்.. ஆஸ்திரேலியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிந்த ஒரு தம்பதி மீண்டும் காதல் மலர்ந்து இணைந்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்கியிருக்கின்றனர். இவர்களின் காதல் கதை இணையத்தில் வேகமாக பரவி மனதை உருக வைத்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
முதன் முதலாக சந்தித்தது
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் டேனியல் கர்டிஸ் மற்றும் டிம் கர்டிஸ். கடந்த 2002 ஆம் ஆண்டு ஒரு ஆன்லைன் டேட்டிங் அப் மூலம் இந்த ஜோடி முதன் முதலாக சந்தித்துக்கொண்டது. சில மாதங்களாக தொடர்ந்து ஒன்றாக சுற்றி வந்த இந்த ஜோடி, 2003 ஆம் ஆண்டு டிம் திருமணம் பற்றி முதன் முதலாக பேச்சை எடுத்து இருக்கிறார். இதை ஏற்றுக்கொண்ட டேனியல் கர்டிசும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு முன்பே டேனியலுக்கு இரண்டு குழந்தைகள் இருந்து இருக்கின்றனர்.
மகிழ்ச்சியுடன் வசித்து வந்தனர்
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத டிம் கர்டிஸ், டெனியல் கர்டிசை விரும்பி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 18 மாதங்கள் கழித்து டேனியல் கர்ட்டிசின் இரண்டு குழந்தைகளையும் முறைப்படி தத்தும் எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சியாக இந்த தம்பதிகளின் இல்லற வாழ்வு சென்றது. இதனால், இந்த தம்பதிக்கு 3 குழந்தைகளும் பிறந்தன. 5 குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வசித்து வந்த இந்த ஜோடி மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை.. இவர்களுக்குள் தீடிரென பிணக்கு ஏற்படத் தொடங்கியது.
பணிச்சுமை காரணமாக
குறிப்பாக 2012 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக தொழிலில் பெரும் நஷ்டம் அடைந்தனர். இதனால், டிம் வேறு வேலை தேடி செல்ல நேர்ந்தது. கப்பல் கட்டுமானம் தொடர்பான பணியில் டிம் சேர்ந்து விட்டார். இதனால், அவர் பணியில் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. பணிச்சுமை காரணமாக இந்த ஜோடிக்குள் பிரிவு அதிகரித்தது. ஒருவொருக்கொருவர் மனம் விட்டு பேச கூட நேரம் இல்லாததால் பிளவு அதிகரித்துக் கொண்டே சென்றது.
ஒருவர் மீது ஒருவர் பாசம்
ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிடலாம் என்று முடிவுக்கு வந்து விட்டனர். 2015 ஆம் ஆண்டு டிம் முதல் முதலாக விவாகரத்து கோரி நோட்டிசும் விடுத்து விட்டார். இதை டேனியலும் ஏற்றுக்கொண்டதால் அதே ஆண்டில் இந்த ஜோடி பிரிந்து விட்டது. இந்த ஜோடி பிரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்தே இருந்து இருக்கின்றனர். ஈகோ, ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லுதல் என போட்டிக்கொண்டு பிரிந்து விட்டனர்.
விட்டுக்கொடுத்து செல்ல
குழந்தைகள் வற்புறுத்தியும் கூட இந்த ஜோடிக்கு ஈகோ தொடர்ந்துஇருக்கிறது. இந்த சூழலில், கடந்த 2017 ஆம் ஆண்டு டேன்னியலின் வழக்கறிஞர், இந்த ஜோடிகளுக்கு உள்ள உண்மையான பிரச்சினையை உணர்ந்து இந்த ஜோடியை மீண்டும் இணைக்க முயற்சித்தார். இதன்படி, டேனியலிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்று கணவருடனான உறவை புதுப்பிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
மீண்டும் காதலை புரிந்து கொண்டு
இதன்படி டேனியலும் டிம்மிற்கு இமெயில் செய்துள்ளார். தனது தவறை உணர்ந்து விட்டதாகவும் குழந்தைகளுக்காக பெற்றோராக இணைந்து வாழ விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த இமெயிலுக்கு ஆறு மாதம் கழித்து பதில் அளித்த டிம், நாம் ஏன் நேரில் சந்தித்து பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் இந்த ஜோடி மீண்டும் சேர்ந்து விட்டது. சில மனக்கசப்புகள் காரணமாக விவாகரத்து வரை சென்று விட்டு மீண்டும் காதலை புரிந்து கொண்டு இந்த ஜோடி குழந்தைகளுக்காக இணைந்து கொண்டது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.