"அவ்வளவு தான்!" ட்விட்டரில் வரும் சரவெடி மாற்றங்கள்! பக்கா ஸ்கெட்ச் உடன் களமிறங்கும் எலான் மஸ்க்
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனம் மிக விரைவில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் வர உள்ள நிலையில், அவர் பல அதிரடி மாற்றங்களை ட்விட்டர் நிறுவனத்தில் கொண்டு வர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து விமர்சித்து வந்தவர் தான் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்ற ஒன்றாக ட்விட்டர் தளம் இல்லை என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
ட்விட்டர் - எலான் மஸ்க் டீல்! ஆவேசமாகி பராக் அகர்வாலை சூழ்ந்து கொண்ட ஊழியர்கள்..என்ன தான் நடக்கிறது
எலான் மஸ்க்
இதை ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த டீலை தடுக்கும் முயற்சியில் ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் சிலர் இறங்கினர். இருப்பினும், பெரும்பாலான ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் எலான் மஸ்க் டீலுக்கு ஒப்புக் கொண்டனர். அதன்படி ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரு பங்கை சுமார் 54 டாலருக்கு வாங்குகிறார். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்த ட்விட்டர் இதன் மூலம் தனிநபர் நிறுவனமாக மாறுகிறது.
நம்பிக்கை இல்லை
எலான் மஸ்க் கைகளில் ட்விட்டர் நிறுவனம் சென்றுள்ள நிலையில், இனி அங்குப் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலுக்கு பதிலாக புதிய நபர் அப்பதவிக்குக் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதமே தற்போதுள்ள ட்விட்டர் நிர்வாகத்தின் மீது தனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை என்று ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லரிடம் மஸ்க் கூறி இருந்தார்.
புதிய சிஇஓ
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளுக்குச் செல்லும் வரை பராக் அகர்வால் சிஇஓ பொறுப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக யார் அந்த பொறுப்பிற்குக் கொண்டு வரப்படுவார் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. ட்விட்டர் நிறுவனத்துடன் பராக் அகர்வால் போட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, 12 மாதங்களுக்குள் அவர் நீக்கப்பட்டால் 42 மில்லியன் டாலரை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள் உடன் மீட்டிங்
இருப்பினும், எலான் மஸ்க்கின் கைகளில் ட்விட்டர் நிறுவனம் சிறப்பாகவே செயல்படும் என்று பராக் அகர்வால் தொடர்ந்து கூறி வருகிறார். இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் இடையேயான மீட்டிங் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ஆவேசமான ட்விட்டர் ஊழியர்கள், "இந்த டீல் முடிந்தால், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் பலருக்கு வேலை இருக்காது என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி உங்களது நேர்மையான எண்ணம் தான் என்ன" என்று கேள்வி எழுப்பினார்.
மாற்றம் இருக்கும்
பொதுவாகவே ஒரு நிறுவனத்தின் ஓனர்ஷிப் மாறும்போது, அங்குள்ள டாப் அதிகாரிகளும் மாற்றப்படுவது வழக்கம் தான். எனவே, எலான் மஸ்க் வருகை என்பது ட்விட்டர் நிறுவனத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே குழப்பம் அடைந்துள்ள ஊழியர்கள் மத்தியில் பேசிய பராக் அகர்வால், "புதிய தலைமையின் கீழ் வரும் காலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். அதேநேரம் கடந்த சில ஆண்டுகளில் நாம் இப்போது இருப்பதை விட சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும். அது குறித்துத் தான் நான் நிறைய யோசிக்கிறேன்" என்றார்.
ஊதியம் குறைப்பு
மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் டாப் நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். இருப்பினும், எந்தளவுக்குச் செலவுகளைக் குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. அதேநேரம் ட்விட்டர் நிறுவனம் முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வரும் வரை செலவுகளைக் குறைக்கும் முடிவுகளை எலான் மஸ்க் எடுக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.