ஆச்சரியம்.. ஆனால் உண்மை! பசிபிக் கடல் அடியில் மர்ம சாலை.. இல்லாத அட்லாண்டிஸ் கண்டத்துக்கு வழியா?
வாஷிங்டன்: அமெரிக்கா அருகே பசிபிக் பெருங்கடலின் அடியில் மஞ்சள் நிற செங்கல் சாலை போன்ற வடிவத்தை கடலியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாட்டிலஸ் என்ற கப்பலில் அமெரிக்காவை சேர்ந்த கடலியல் விஞ்ஞானிகள் குழு அந்நாட்டை சேர்ந்த லிலியுகலானி ரிட்ஜ் என்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது பசிபிக் பெருங்கடலின் அடியில் விசித்திரமான தோற்றம் ஒன்று இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அது செங்கற்களால் உருவாக்கப்பட்ட சாலை அல்லது தரைபோன்று காட்சியளித்திருக்கிறது.
பசிபிக் கடலில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த
அட்லாண்டிஸ் செல்லும் பாதையா?
இந்த ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் நவீன கருவிகளை கொண்டு கடலுக்கு அடியில் ஆய்வு நடத்தி அதை யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். அதில், சிதைந்துபோன செங்கல் பாதைபோல் இருக்கும் தோற்றத்தை கண்டு விஞ்ஞானி ஒருவர் "வினோதமாக இருக்கிறது" என்றும் மற்றொருவர் இதுதான் "தொலைந்துபோன கண்டமான அட்லாண்டிஸ் (கற்பனை கதைகளில் சொல்லப்படும் கண்டம்) செல்லும் பாதையா?" எனவும் கேட்கின்றனர்.
தொடரும் கடலியல் ஆய்வு
ஆழ்கடல் அபூர்வங்கள் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. குறிப்பாக மத்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்களின் வித்தியாசமான கடற்பரப்பு மற்றும் அவற்றின் தோற்றங்கள் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்பட இயலாத நிலையில் உள்ளன. அதை உலகின் பல நாடுகளை சேர்ந்த கடலியல் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து தங்களின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
தனித்துவமான தோற்றம்
அந்த வகையில், இந்த விஞ்ஞானிகள் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை ஆராய்வதே தங்களின் நோக்கம் என தெரிவித்து இருக்கின்றனர். எனவே அவற்றை காணொலி வடிவில் நேரலையில் ஆவணப்படுத்தி வரும் அவர்களுக்கு இந்த விநோதமான பாதை கண்ணில்பட்டுள்ளது. அது தனித்துவம் மிக்கதாகவும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட செங்கல் சாலைபோல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
எரிமலை வெடிப்பு
பழங்கால எரிமலை பிளவுகளுக்கு இந்த ஆழ்கடல் பாதை வடிவம் ஒரு எடுத்துக்காட்டு என குழுவில் இருந்த விஞ்ஞானி ஒருவர் கூறி இருக்கிறார். முன்னதாக இந்த குழுவினர் நூட்கா சீமவுண்டில் நடந்த மாநாட்டில் வறண்டுபோன ஏரி படுகையை கண்டுபிடித்தனர். தற்போது ஆழ்கடலில் இருந்த செங்கல் போன்ற பாதையை கண்டறிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்த யூடியூப் வீடியோ விளக்கத்தில், "எரிமலைகள் வெடிக்கும்போது புவியில் பிளவுகள் ஏற்படும். அவ்வாறு பல துண்டுகளான பாறைகளாக கடற்பரப்பிற்குள் சென்று இருக்கலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பாறைகள்
எரிமலை வெடிப்புகளால் பிளவுபடும் பாறைகள் அடுத்தடுத்து சூடாகவும், குளிராகவும் மாறி கூழாங்கற்கள் உருவாகின்றன என்றும் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். இதற்கு முன் இதுபோன்ற பகுதியில் ஆய்வு செய்ததில்லை என்றும், இந்த வினோத வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு தீவிர ஆய்வை தொடங்கி பழமையான கடல் பாறைகள் குறித்து புதிய கண்டுபிடிப்புகளை வழங்க இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.