ஒரே டோஸ் மட்டும் போதும்... கொரோனாவுக்கு எதிராக 66% தடுப்பாற்றல்... அசத்தும் ஜான்சன் & ஜான்சன்
வாஷிங்டன்: ஒரு டோஸ் மட்டுமே செலுத்த வேண்டிய ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி 66% பலன் அளிப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் பல பகுதிகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், மெக்சிகோ என பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவை் கட்டுப்படுத்தும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நிறுவனங்களும் தடுப்பூசிகளை உருவாக்கி சோதனை செய்து வருகின்றன. அவற்றில் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி 94% பலனளிக்கிறது. அதேபோல ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியும் 72% முதல் 90%வரை பலனளிக்கின்றன.
66% தடுப்பாற்றால்
இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், தனது தடுப்பூசி 66% பலனளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள சுமார் 44 ஆயிரம் தன்னார்வலர்களிடம் நடத்தி ஆய்வில் இந்த முடிவு கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த சோதனைகள் அனைத்தும் உருமாறிய கொரோனா கண்டறியப்படுவதற்கு முன் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு டோஸ் போதும்
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பாற்றல் மற்ற பைசர், மாடர்னா தடுப்பூசிகளைப் போல இல்லை என்றாலும்கூட சர்வதேச அளவில் இந்தத் தடுப்பூசிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏன்னெறால் இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளும் 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும். ஆனால், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஒரே டோஸ் அளித்தால் போதும். இதன் மூலம் சிரஞ்ச் போன்ற மருத்துவ கழிவுகள் குறைவாகவே உருவாகும். அதேபோல குறைந்த நேரத்தில் அதிக பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும்.
ஒருவரும் உயிரிழக்கவில்லை
தீவிரமான கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதே இந்த வகை தடுப்பூசியின் முக்கிய நோக்கமாகும். அதன்படி தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 85% பேருக்கு தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை.
உருமாறிய கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யுமா
இவை எல்லாம் உருமாறிய கொரோனாவுக்கு முன் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள். இந்தத் தடுப்பூசி தென்னாப்பிரிக்க வகை கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யுமா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. தென்னாப்பிரிக்க வகை கொரோனாவுக்கு எதிராகச் சோதனை செய்யவில்லை என்றும் இருப்பினும் அதற்கு எதிராகவும் தடுப்பூசி வேலை செய்யும் என நம்புவதாகவும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் பால் ஸ்டோஃபெல்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி
2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் ஆயிரம் கோடி தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவற்றில் சுமார் 10 கோடி டோஸ்களுக்கு அமெரிக்கா ஆர்டர் அளித்துள்ளது. அமெரிக்க தவிர, இந்த ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகள்,தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலும் உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.