ஊழல் வழக்கில் சேம்சங் துணைதலைவர்.. 'பொது மன்னிப்பு வழங்கிய தென்கொரியா'.. இனி பொறுப்புகளை பார்க்கலாம்
வாஷிங்டன்: சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு தென் கொரியா அதிபர் பொது மன்னிப்பு வழங்கியுள்ளாதன் மூலம் லீ ஜோ யோங்குக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி அவர் முழு அளவில் நிறுவனத் தலைவராக பணியாற்ற முடியும்.
எலக்ட்ரானிக் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் சம்சங் நிறுவனமும் ஒன்று. செல்போன் தொடங்கி, டிவி, பிரிட்ஜ் என உலக எலக்ட்ரானிக் துறையில் சம்சங்ங் நிறுவனம் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
டெல்லி: டிராலியில் 2215 தோட்டாக்கள்! சுதந்திர தினத்தை சீர்குலைக்க திட்டமா? 6 பேரிடம் தீவிர விசாரணை
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் 84 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
சம்சங் துணைத்தலைவர்
இப்படி பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் வாய்ந்த இந்த நிறுவனத்தின் தலைவராக லீ குன் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் காலமானர். இதையடுத்து, அவரது வாரிசும், துணைத்தலைவருமான லீ ஜே-யோங் சம்சங் நிறுவனத்தின் தலைவர் ஆக முற்பட்டார். இந்த நிலையில், தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன் ஹைக்கு 2017- ஆம் ஆண்டு சாம்சங் துணைத் தலைவர் லீ ஜே-யோங் லஞ்சம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான குற்றச்சாட்டில் அவருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
18 மாதம் சிறைத்தண்டனை
இதனை தொடர்ந்து 18 மாதங்கள் சிறையில் இருந்த லீ ஜே-யோங் கடந்த ஆண்டு பரோலில் விடுதலை செய்யப்பட்டார். எனினும், 5 ஆண்டுகளுக்கு பணி செய்யக்கூடாது, வெளிநாடு செல்ல கட்டுப்பாடுகள் என்ற நிபந்தனையும் அவருக்கு விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சம்சங் நிறுவன துணைத் தலைவரான லீ ஜே-யோங்-க்கு தென்கொரிய அதிபர் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். பொது மன்னிப்பு வழங்கப்பட்டதன் மூலம் லீ ஜே யோங்குக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அவரால் முழு அளவில் நிறுவனத் தலைவராக பணியாற்ற முடியும்.
நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு ஏற்கலாம்
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தென்கொரியா அதில் இருந்து மீளும் முயற்சியாக பெரும் தொழில் அதிபர்கள் மேலும் சிலருக்கு தென்கொரியா பொது மன்னிப்பை அளித்துள்ளது. லோட்டே குழுமங்களின் தலைவர் ஷின் டோங் பின்னுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச வழக்கில் இவருக்கும் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் சாம்சங் நிறுவனத்தின் தலைவராக லீ பொறுப்பு ஏற்க முடியும். இதனால், நிறுவனத்தின் வளர்ச்சி சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொருளாதார மீட்சிக்கு இது உதவும் என்ற அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் வளர்ச்சி இயந்திரம்
இதுபோல பொருளாதார காரணங்களுக்காக பொதுமன்னிப்பு வழங்கப்படுவது பல ஆண்டுகளாகவே தென்கொரியாவில் பின்பற்றப்படும் வழக்கங்களில் ஒன்றாகவே உள்ளது. உலக பொருளாதார நெருக்கடியால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார மந்த நிலை நீண்ட காலம் நீடிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள தென்கொரிய நீதித்துறை அமைச்சகம், லீ மற்றும் பிற தொழில் அதிபர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம், தொழில்நுட்ப துறையில் புதிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவையால் நாட்டின் வளர்ச்சி இயந்திரம் முன்னோக்கி செல்லும் என்றும் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக பணக்காரர்களில் 278வது இடம்
தீவிர நோய் பாதிப்பு கொண்டவர்கள் மற்றும் தண்டனைக்காலத்தை நிறைவு செய்ய உள்ளவர்கள் என மொத்தம் 1,693 பேருக்கு தென்கொரிய அதிபர் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை வருடாந்திர விடுதலை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இதை முன்னிட்டு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சாம்சங் துணைத்தலைவராக உள்ள லீ ஜே-யோங் உலக பணக்காரர்களின் பட்டியலில் 278-வது இடம் வகிக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 7.9 பில்லியன் டாலர் ஆகும்.