'எந்திரன்' பாணியில் மனித மூளைக்குள் சிப்.. எலான் மஸ்க்கின் பலே திட்டம்.. என்னெல்லாம் நடக்கப்போகுதோ?
வாஷிங்டன்: மனித மூளைக்குள் சிப் பொருத்தி அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, மனிதர்கள் தங்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கம்ப்யூட்டரில் செயல்படுத்தும் திட்டத்தை எலான் மஸ்கின் நிறுவனம் விரைவில் செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் உலகின் நம்பர் 1 பணக்காரருமான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் உலகம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

ஹைபர் லூப் எனப்படும்
திவால் நிலையை நோக்கி ட்விட்டர் செல்வதாக கூறியிருக்கும் எலான் மஸ்க் அதன் வருவாயை பெருக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுபோக பல வியக்கும் படியான திட்டங்களை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை அறிவித்த எலான் மஸ்க் அப்போதே பலரையும் வியக்க வைத்தார். அதுபோல ஹைபர் லூப் எனப்படும் அதிவேக பயண திட்டம் குறித்தும் எலான் மஸ்க் ஆலோசித்து வருகிறார்.

மனித மூளைக்குள் சிப்
அந்த வகையில், மனித மூளைக்குள் சிப் பொருத்தி அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, மனிதர்கள் தங்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கப்யூட்டரில் செயல்படுத்தும் திட்டத்தை எலான் மஸ்கின் நிறுவனம் விரைவில் செயல்படுத்த இருக்கிறதாம். எந்திரன் படத்தின் கதை போல இதை பார்ப்பதற்கு இருக்கலாம். ஆனால், இது உண்மைதான். இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை எலான் மஸ்கின் நியூரோலிங் நிறுவனம் கோரியிருக்கிறது.

குரங்குகளிடம் சோதனை
அனுமதி கொடுக்கும் பட்சத்தில் அடுத்த ஆறு மாதங்களில் இந்த திட்டத்திற்கான சோதனை முயற்சியை தொடங்க நியூரோ லிங் ஆலோசித்து வருகிறது. இந்த சிப்பை தனக்கு தானே பொருத்திக்கொள்ளவும் எலான் மஸ்க் முடிவு செய்து இருக்கிறாராம். இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி எலான் மஸ்க் கூறுகையில், "அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஆய்வறிக்கைகளை சமர்பித்து இருக்கிறோம். அடுத்த ஆறு மாதங்களில் சோதனை தொடங்கிவிடலாம் என்று நினைக்கிறேன். எனினும், இந்த காலக்கெடு நிச்சயமானதாக இல்லை. மனிதர்களிடம் இந்த சோதனை நடத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்"என்று கூறினார்.

வீடியோ கேம் விளையாடிய குரங்குகள்
மனித மூளையில் பொருத்தப்படும் சிப் என்பது ஒரு சிறிய காயின் (நாணயம்) அளவில் தான் உள்ளது என்று கூறப்படுகிறது. குரங்குகளிடம் இதை பரிசோதிக்கும் போது குரங்களால் அடிப்படையான சில வீடியோ கேம்களை விளையாட முடிந்துள்ளது. இந்த சிப் பொருத்துவதன் மூலம் மனித சமூகத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். பார்வையை இழந்தவர்கள் மீண்டும் பார்வையை பெற முடியும். நரம்பியல் நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கும்.

இது எப்படி செயல்படுகிறது?
மூளையில் காயங்கள் ஏற்பட்டவர்கள் என மூளையில் பாதிப்பு உள்ளவர்களுக்கு எந்த நியூரான் செயல் இழந்ததோ அதை இந்த சிப் தூண்டிவிட்டு அதன் மூலம் வேலைகளை செய்ய வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இந்த சோதனை வெற்றி அடைந்தால் நாம் மனதில் நினைக்கும் வேலையைக் கூட கணினி செய்து முடிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எலான் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனத்தை போன்று மேலும் பல நிறுவனங்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

எதிர்கால திட்டங்களை..
எலான் மஸ்க் இதுபோல பல்வேறு எதிர்கால திட்டங்களை அடிக்கடி அறிவித்து வருகிறார். எனினும், இதில் சில திட்டங்கள் நடைமுறைக்கு வராமலும் இருந்துள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டே நியூராலிங், மனிதர்களிடத்தில் 2020 ஆம் ஆண்டில் சோதனை நடத்தும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த திட்டம் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தாமதம் ஆகியிருக்கிறது. சின்க்ரான் (Synchron) என்ற நிறுவனம் இதேபோன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஜுலை மாதமே மனித மூளையில் பொருத்தி இந்த சோதனை நடத்தியதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications