இன்னும் ஒரு மாசம்தான் நீங்க இருப்பீங்க... அதுக்குள்ள ஒரு முடிவை எடுங்க... டிரம்பிற்கு சவுதி கோரிக்கை
வாஷிங்டன்: சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடர தடை விதிக்க வேண்டும் என்ற சவுதி அரசின் கோரிக்கை அமெரிக்க அரசு பரீசிலனை செய்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவிக்காலம் வரும் ஜனவரி 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக விரைவில் அமெரிக்க அதிபர் இந்த விஷயத்தில் செயல்பட வேண்டும் என்று சவுதி அரேபியா விரும்புகிறது.
வழக்கு என்ன
அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களுடன் பணியாற்றிய சவுதியின் முன்னாள் தூதர் சாட் அல்ஜாப்ரி குறித்த தகவல்களை உளவாளிகளைப் பயன்படுத்தி சவுதி இளவரசர் சேகரித்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவரைக் கொலை செய்யவும் இளவரசர் ஒரு குழுவை அனுப்பியதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அல்ஜாப்ரியை படுகொலை செய்யச் சவுதியிலிருந்து ஒரு குழு கனடாவுக்குச் சென்றது. ஆனால் அவர்கள் அமெரிக்க எல்லையில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அல்ஜாப்ரி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்த தனது வழக்கில் கூறியுள்ளார்.
சவுதி கோரிக்கை
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடர தடை விதிக்க வேண்டும் என்று சவுதி அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை தற்போது வெளியுறவுத் துறையின் சட்டப்பிரிவு பரிசீலித்து வருகிறது. விரைவில் அவர்கள் தங்கள் முடிவுகளை வெளியுறவுத் துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோவிடம் அளிப்பார்கள். அவர் நீதித்துறைக்குத் தேவையான பரிந்துரைகளைச் செய்வார்.
கொல்ல முயல்வது ஏன்
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் குறித்த பல ரகசியத் தகவல்களும் பிஸ்னஸ் தொடர்புகளும் அல்ஜாப்ரிக்கு தெரியும். மேலும், தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கஷோகியை கொன்ற குழு குறித்த தகவல்களும் அல்ஜாப்ரிக்கு தெரியும். இவ்வாறு சவுதி இளவரசர் குறித்த பல முக்கிய தகவல்களும் அல்ஜாப்ரிக்கு தெரியும் என்பதாலேயே அவரை கொல்ல முயற்சிகள் நடைபெறுகின்றன.
எல்லாம் பொய்
இருப்பினும், அல்ஜாப்ரியின் குற்றச்சாட்டுகளைச் சவுதி அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. அரசியல் நோக்கங்களுக்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் சவுதி அரசு கூறியுள்ளது. மேலும், அல்ஜாப்ரி மிகப் பெரிய ஒரு ஊழல் பேர்வழி என்றும் சவுதி அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பதில் கூற மறுப்பு
சவுதி அரசின் இந்த கோரிக்கை குறித்து அமெரிக்க உள்துறை பதிலளிக்க மறுத்துவிட்டது. ஆனால், முன்னர் இது குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், "அல்ஜாப்ரி ஒரு மரியாதைக்குரிய கூட்டாளி, அவரது பணிகள் லட்சக் கணக்கான அமெரிக்க மற்றும் சவுதி மக்களின் உயிர்களைக் காப்பாற்றியது" என்றார். அதேபோல வாஷிங்டனிலுள்ள சவுதி தூதரகமும் இதற்குப் பதிலளிக்க மறுத்துவிட்டது.
அவசரம் காட்டக் கூடாது
புதிய அதிபர் பொறுப்பேற்கும் முன் தங்கள் கோரிக்கை குறித்த முடிவு எடுக்க வேண்டும் என்றும் சவுதி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் அவசரம் காட்டக்கூடாது என்றும் பைடன் அரசு இதில் முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் பொறுமையாகவே முடிவு வேண்டும் என்றும் அல்ஜாப்ரியின் மகன் கலீத் அல்-ஜாப்ரி கூறியுள்ளார். மேலும், சவுதி இளவரசுக்கு ஆதரவான முடிவைத் தவறான முன்னுதாரனம் ஆகிவிடும் என்றும் இதை வைத்துக் கொண்டு அவர் அமெரிக்காவில் யாரை வேண்டுமானாலும் கொல்ல முயல்வார் என்றும் கலீத் அல்-ஜாப்ரி தெரிவித்தார்.
சவுதி விஷயத்தில் டிரம்ப்பும் பைடனும்
டிரம்ப்பின் நிர்வாகம் சவுதி அரேபியாவுடன் வலுவான உறவுகளைக் கொண்டிருந்தது. செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டது டிரம்ப் பெரிய விஷயமாக்கவில்லை. அதேபோல சவுதிக்கு ஆயுத விற்பனையையும் விரைவுபடுத்தினார். டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் சவுதி இளவரசருடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டார். ஆனால் அதேநேரம் அடுத்து அதிபராகப் பொறுப்பேற்கும் ஜோ பைடன் சவுதி அரேபியாவைத் தனது பிரச்சாரத்தில் தொடர்ந்து விமர்சித்தே வந்துள்ளார். சவுதி குறித்த டிரம்ப் அரசின் முடிவுகள் மாற்றப்படும் என்றும் கூறியிருந்தார். இதனாலேயே டிரம்ப் அரசு தங்கள் கோரிக்கை தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று சவுதி விரும்புகிறது.