வாடகையை கொடுங்க.. ட்விட்டர் நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு.. எலான் மஸ்க்கிற்கு என்னாச்சு?
வாஷிங்டன்: எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே ட்விட்டர் நிறுவனமும் அதன் ஊழியர்களும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும் குழப்பத்தை ஒருபக்கம் எலான் மஸ்க் ஏற்படுத்தி வரும் நிலையில், நிதி நெருக்கடியிலும் ட்விட்டர் தவித்து வருகிறதோ... என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு அடுத்தடுத்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் உலக பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் கடந்த மாதம் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்தினார்.
சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து ட்விட்டரை வாங்கியதில் இருந்து எலான் மஸ்க் அந்த நிறுவனத்தில் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் நிறுவனத்தின் ஊழியர்களையே தலை சுற்ற வைக்கும் அளவுக்கு இருந்தது.

ட்விட்டர் நிறுவனம்
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் அதன் சி இ ஓவாக இருந்த பராக் அகர்வால் உள்பட உயர் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கினார். அதோடு, 50 சதவீத ஊழியர்களையும் லே ஆஃப் செய்த எலான் மஸ்க், கூடுதல் நேரம் வேலை பார்க்கும் ஊழியர்கள் மட்டுமே பணியில் தொடரலாம் என்று கெடுபிடி போட்டார். தனது அதிரடியான நடவடிக்கைகளால் தினம் தோறும் செய்திகளில் தவறாமல் எலான் மஸ்க் இடம் பிடித்து வந்தார் என்று சொல்லும் அளவுக்கு பரபரப்பாக இருந்தார்.

குழப்பம், சர்ச்சை
அதுபோக ட்விட்டர் திவால் நிலையும் சந்திக்கும் அபாயத்தில் இருப்பதாக கூறிய எலான் மஸ்க், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார். அதுபோக வருவாயை பெருக்க ட்விட்டர் புளு டிக் வசதியை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஏகப்பட குளறுபடிகள் நடந்தன. பின்னர் ஒருவழியாக பல வண்னங்களில் தற்போது வெரிஃபைடு டிக் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி எலான் மஸ்க் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் பெரும் குழப்பத்தையும் சர்ச்சையும் ஏற்படுத்துவதாக அமைந்து வருகிறது.

ட்விட்டர் நிறுவனத்தில் துர்நாற்றம்
இதற்கு மத்தியில் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களை எலான் மஸ்க் பணியில் இருந்து நீக்கி அடாவடி செய்தார். இதனால் ட்விட்டர் அலுவலகத்தில் துப்புரவு பணிகள் தேங்கின. இதன் காரணமாக ட்விட்டர் நிறுவனத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் ஊழியர்களின் அவஸ்தை படுவதாகவும் அண்மையில் கூட செய்தி வெளியானது. உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தள நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ட்விட்டரில் அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லையா என்று பொது வெளிகளில் நெட்டிசன்கள் விவாதித்ததையும் பார்க்க முடிந்தது.

வாடகை தொகை செலுத்த கோரி நோட்டீஸ்
இந்த நிலையில், வாடகை செலுத்தவில்லை என்ற சர்ச்சையும் ட்விட்டர் மீது விழுந்துள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள கொலம்பியா ரீட் -650 என்ற கட்டிடத்தின் 30 வது தளத்தின் ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கட்டிடத்திற்கான வாடகை தொகையான 136,250 டாலரை செலுத்த தவறியதால் கட்டிடத்தின் உரிமையாளர் கடந்த 16 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால், அப்போதும் செலுத்தவில்லை என்பதால் ட்விட்டர் மீது சான் பிரான்சிஸ்கோ மகாண நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாத துவக்கத்தில் டிவிட்டர் நிறுவனம் தனது தலைமை அலுவலகம் மற்றும் பிற கிளை அலுவலகங்களுக்கான வாடகை செலுத்தாமல் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications